25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்  பொது  மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், இலங்கை   தமிழர்களுக்காக குல்லூர்சந்தை, மல்லாங்கிணறு, மற்றும் கண்டியாபுரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 408 குடியிருப்புகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், இலங்கை தமிழர்களுக்காக குல்லூர்சந்தை, மல்லாங்கிணறு, மற்றும் கண்டியாபுரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 408 குடியிருப்புகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (06.10.2025) பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், இலங்கை தமிழர்களுக்காக அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தை, காரியாபட்டி வட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சி மற்றும் வெம்பக்கோட்டை வட்டம் கண்டியாபுரம் ஆகிய இடங்களில் ரூ.27.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 408 குடியிருப்புகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, அருப்புக்கோட்டை வட்டம், குல்லூர்சந்தையில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.15.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 244 குடியிருப்புகளுக்கான சாவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்திடவும், பாதுகாப்பான மேம்படுத்தப்பட்ட வாழ்வியல் சூழ்நிலைகளை அமைத்துத் தருவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தமிழ்நாடு சட்டப் பேரவைவிதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் கட்டித் தரப்படும். முகாம்களின் அடிப்படைவசதிகள் மேம்படுத்தப்படும். ஆண்டுதோறும் இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பொறியியல்/வேளாண்/முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் வழங்குதல், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும்  சமுதாய முதலீட்டு நிதி, மாதாந்திர பணக்கொடை உயர்வு, இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லாமல் அரிசி, விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்புகள் உள்ளிட்ட  பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பல்வேறு கட்டங்களாக புதிய வீடுகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் ஏழு இலங்கைத் தமிழர் முகாம்கள் உள்ளது. முதல் கட்டமாக அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தை முகாமில் 70 வீடுகளும், வெம்பக்கோட்டை வட்டம் கண்டியாபுரம் முகாமில் 232 வீடுகளும், சிவகாசி வட்டம் அனுப்பன்குளம் முகாமில் 32 வீடுகளும், ஆணைக்குட்டம் முகாமில் 117 வீடுகளும் மற்றும் செவலூர் முகாமில் 70 வீடுகளும் ஆக மொத்தம் 451 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தை முகாமில் 244 வீடுகளும், வெம்பக்கோட்டை வட்டம் கண்டியாபுரம் முகாமில் 124 வீடுகளும், காரியாபட்டி வட்டம் மல்லாங்கிணறு முகாமில் 40 வீடுகளும் ஆக மொத்தம் 408 வீடுகள் ரூ.27.41 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டிகொடுத்தமைக்காகவும், தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் எங்களுக்கும் வழங்கி எங்களது வாழ்வாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இலங்கைத் தமிழர்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வெண்ணிலா, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, தனிவட்டாட்சியர் (அயலகத் தமிழர் நலன்) திருமதி கார்த்திகேயினி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News