25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 12, 2026

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கப்பணிகள் மற்றும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு .

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் விருதுநகரில் உள்ள உணவு தயாரிக்கும் மையத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கப்பணிகள் குறித்தும், விருதுநகர் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர்/ மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,I A S., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், (11.09.2026) ஆய்வு மேற்கொண்டார்.  தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டங்களான 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வின்போது, சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கேற்ப மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், வசதிகள், உணவு பரிமாறும் இடங்களின் சுகாதாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும்,விருதுநகரில் செயல்பட்டு வரும் காலை உணவு தயாரிக்கும் மையத்தில் மாணவர்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள், உணவுப் பொருட்களின் தரம், சமையல் நடைபெறும் முறை, உணவு தயாரிக்கும் பணியாளர்களின் சுகாதாரம், சமையலறையின் தூய்மை, உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு உணவு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மாணவர்களுக்கு சத்தான, சுகாதாரமான மற்றும் தரமான காலை உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், தங்க மோதிரம் வைப்பறைகள், அதற்கான பாதுகாப்பு வசதிகள், நிகழ்ச்சி நடைபெறும் இடம், பயனாளிகள் அமர்வதற்கான ஏற்பாடுகள், வருகை தரும் பயனாளிகளுக்கு முறையாக வசதிகளை ஏற்படுத்தி தருதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் வசதி, சுகாதார வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து முடிக்கவும், பயனாளிகளின் வருகை, பதிவு, சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை முறையாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.இலக்குவன், முதன்மை கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், இணை இயக்குநர்(மருத்துவப்பணிகள்) மரு.செந்தில் குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Sep 12, 2026

சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்கள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்/

தமிழ்நாடு அரசு 2026-2027 ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கு ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36.00 இலட்சம் வீதம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படவுள்ளது.2026-2027 ஆம் ஆண்டில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் முதுகலைப்படிப்பு  பயில உள்ள சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ/மாணவியர்கள் 2026-2027ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க  உலகளாவிய  QS (குவாக்கரெல்லி சைமண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள்/  கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் (Unconditional offer letter) பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8.00 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பட்டப்படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல் வணிகவியல் &  நிதி, மனிதநேயம் & கலை, வேளாண்மை அறிவியல், சுகாதாரம் பயன்பாட்டு அறிவியல், , சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனித நேய படிப்புகள் (Humanities), சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுத்து  முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெற்றவராக இருத்தல் வேண்டும்.  இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.bcmbcmw.tn.gov.in/welfschemes.minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து  உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால்  பாரம்பரிய  கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005. என்ற முகவரிக்கு 15.10.2026-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 12, 2026

எண்ணெய் மதிப்பு கூட்டு தொகுப்பு மற்றும் செயல் விளக்கத்திடல் அமைத்திட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் 2026-27-ஆம் ஆண்டு வேளாண்மைத் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய்க்கான இயக்கம் என்ற திட்டத்தின்கீழ் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க மதிப்புக் கூட்டு தொகுப்பு மற்றும் செயல்விளக்கத்திடல் அமைத்திட இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டமானது நிலக்கடலை, சூரியகாந்தி போன்ற பயிர்களுக்காக செயல்படுத்தப்படவுள்ளது.  இதில் நிலக்கடலையில் தொகுப்பு மற்றும் செயல்விளக்கத்திடல் காரியாபட்டி, ம.ரெட்டியபட்டி, நரிக்குடி, வத்திராயிருப்பு, விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கடலை மதிப்புக்கூட்டு தொகுப்பு 1000 எக்டேர் பரப்பளவில் உருவாக்கி அதில் அடங்கியுள்ள விவசாயிகளுக்கு ஏழு ஆண்டுகளுக்குட்பட்ட புதிய நிலக்கடலை இரகங்கள் வழங்கப்படும். உயர் விளைச்சல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நிலக்கடலை விளைச்சல் அதிகரிக்கப்படும்.மேலும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் நிலக்கடலைகளை வாங்கி மதிப்புக் கூடுதலாக எண்ணெய் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கடலை செயல்விளக்கத்திடலின் கீழ் 100 எக்டேர் (20 எக்டேர் ஒரு தொகுப்பு) தேர்வு செய்து அனைத்து தொழில்நுட்பங்களையும் உட்புகுத்தி நிலக்கடலை விளைச்சலை உயர்த்திட திட்டமிடப்பட்டுள்ளது.இதேபோன்று, சூரியகாந்தி பயிரில்; மதிப்புக்கூட்டு தொகுப்பு (300 எக்டேர்) மற்றும் செயல்விளக்கத்திடல் 100 எக்டேர் (20 எக்டேர் ஒரு தொகுப்பு) விருதுநகர், அருப்புக்கோட்டை, ம.ரெட்டியபட்டி ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.எனவே, இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடைந்து எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 11, 2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் உயிர் - பட்டாசு தொழிலாளர் குடும்ப நலன் மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளையினை தொடங்கி வைத்தார்.

 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு திட்டமான  உயிர் திட்டத்தின் கீழ் பட்டாசு தொழிலாளர் குடும்ப நலன் மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளையினை (10.09.2026) தொடங்கி வைத்தார்.பின்னர், பட்டாசு வெடி விபத்தில் பெற்றோரை இழந்த 83 மாணவர்களுக்கு புத்தகப்பை, நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்களை வழங்கினார். மேலும், விருதுநகர் கல்வி அறக்கட்டளையின் மூலம் 4 மாணக்கர்களுக்கு ரூ.18,864 மதிப்பிலான உயர் கல்வி கட்டணத்திற்கான காசோலைகளை  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தித் தொழில் பல்வேறு குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. இத்தொழிலில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்துகளினால் சில நேரங்களில் தொழிலாளர்கள் உயிரிழப்பதோடு, அவர்களது குடும்பங்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, குடும்பத்தின் முதன்மை வருவாய் ஈட்டும் நபரை இழந்த குடும்பங்கள், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் மற்றும் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தொடர்ந்து கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இத்தகைய குடும்பங்களின் துயரங்களைப் போக்கி, அவர்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைத்து வழங்குவதற்காக, விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் “உயிர் -பட்டாசு தொழிலாளர் நலன் மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை”தொடங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், பட்டாசு தொழிற்சாலை விபத்துகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான பல்வேறு துறைகளின் வாயிலாக ஒருங்கிணைந்த உதவிகளை வழங்கி, அவர்கள் மீண்டும் நிலையான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்ள வழிவகை செய்வதாகும்.இவ்வறக்கட்டளையின் வாயிலாக, விபத்துகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தற்போதைய தேவைகள் மட்டுமின்றி, அவர்களின் நீண்டகால நலன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.குறிப்பாக, பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்வி இடைநிற்றலைத் தடுப்பது, அவர்களின் பள்ளி மற்றும் உயர்கல்விக்குத் தேவையான உதவிகளை வழங்குவது, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது, மருத்துவ உதவிகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.மேலும், குடும்பத்தின் வருவாய் ஈட்டும் நபரை இழந்த குடும்பங்கள் மற்றும் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களின் திறன் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தொழிற்பயிற்சி, சுயதொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களைப் பெற்றுத்தருவதுடன், சமூகப் பாதுகாப்பு சார்ந்த உதவிகள், கல்வி உதவிகள், மருத்துவ உதவிகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவதற்கும் இவ்வறக்கட்டளை வழிவகுக்கும்.இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டதன் மூலம், மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை விபத்துகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரண உதவிகளைத் தாண்டி, நீண்டகால கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு சார்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு ஆதரவு கிடைக்கும் வகையில் புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், பட்டாசு தொழிற்சாலை நிர்வாகிகள், அரசு அலுவலர்கள்  உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

Sep 11, 2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.95 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள் மற்றும் சமுதாய கூட்டத்தினை திறந்து வைத்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் ஜமீன் கொல்லம்கொண்டான் மற்றும் எஸ்.இராமலிங்காபுரம் கிராமத்தில் தலா ரூ.20 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் கோபாலபுரம் ஊராட்சி அங்கப்பநாயக்கன்பட்டியில் ரூ.45 இலட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் என மொத்தம் ரூ.95 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.தமிழ்நாடு அரசு  பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை கருத்தில் கொண்டு, கிராமப்புறங்களில் கல்வி, ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக, இப்புதிய அங்கன்வாடி மையங்கள் மற்றும் சமுதாய கூடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன.அதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், ஜமீன் கொல்லம்கொண்டான் கிராமத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பிலும், எஸ்.இராமலிங்காபுரம் கிராமத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.40 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு அங்கன்வாடி மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.மேலும், கோபாலபுரம் ஊராட்சி அங்கப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.45 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் அப்பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி, ஊட்டச்சத்து உணவு, சுகாதார பராமரிப்பு மற்றும் வளர்ச்சி கண்காணிப்பு உள்ளிட்ட அங்கன்வாடி மையத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகள் சிறப்பாக கிடைக்க வழிவகை ஏற்படும். மேலும், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான கற்றல் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதேபோல், அங்கப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள சமுதாய கூடம் மூலம் அப்பகுதி பொதுமக்கள் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சமூக, பொது மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை வசதியாக நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்வில், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், இ.ஆ.ப., இணை இயக்குநர்(ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்), திட்ட இயக்குநர் திருமதி ஷீலா சுந்தரி, இராஜபாளையம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி பங்கஜம் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sep 11, 2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்அவர்கள் மாநிலம் முழுவதும் 43,600 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி சீதனப் பொருட்கள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை  அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் சமுதாய வளைகாப்பு விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்  (10.09.2026) மாநிலம் முழுவதும் 43,600 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்தி சீதனப் பொருட்கள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வசதி வாய்ப்பற்ற  பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரமான வாழ்விற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஒரு அண்ணனாகவும் குழந்தைகளுக்கு ஒரு தாய் மாமனாகவும் இருந்து திட்டங்களை அறிவித்து வருகிறார்கள்.  ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதிற்கொண்டு கர்ப்பிணி பெண்கள், கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியே இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மையும் கிடைக்காமல், அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டம் இந்த வளைகாப்பு திட்டமாகும். சாதி மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்பகால பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணித் தாய்மார்களை சென்றடைய செய்து, அவர்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உயர்த்துதல், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்துதல், தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள், இணை உணவின் அவசியம், குழந்தைகள் நோய் வாய்ப்படும் போது அளிக்கப்பட வேண்டிய கவனிப்பு போன்ற பல விவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், குழந்தைகளின் வளர்ச்சிப் படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகப்பேறு உதவித் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 43,600 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு  நிகழ்ச்சி நடத்தும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது .விருதுநகர் மாவட்டத்தில் 1200 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.முதற்கட்டமாக இராஜபாளையம் நகர் மற்றும் ஊரக   பகுதிகளில் உள்ள 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு  வளைகாப்பு சீதன பொருட்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது.எனவே, இந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பணிதாய்மார்களும், இந்த கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.இவ்விழாவில், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான, இ.ஆ.ப.,  இணை இயக்குநர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்) திருமதி அன்பு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, இராஜபாளையம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி பங்கஜம், உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

Sep 10, 2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (09.09.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களிடையே சமூக நல்லிணக்கத்தினை மேம்படுத்திடவும், போதையில்லா இளைஞர் சமூகத்தினை உருவாக்கிடவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில் பல்வேறு முன்னெடுப்பு திட்டங்களை செயல்படுத்திவருகிறார். தமிழக இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தினை ஏற்படுத்திடவும், திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு பயிற்சியளித்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்க செய்திடும் வகையில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக விளையாட்டு விடுதிகளை ஏற்படுத்தி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தினந்தோறும் வழங்கப்படும் செலவினத்தொகையினை ரூ.350-லிருந்து ரூ.450-ஆக உயர்த்தி வழங்கி வருகிறார். மாணவர்கள் விளையாடுவதன் மூலமாகவே உடல் ஆரோக்கியத்தினை பாதுகாக்க முடியும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மன அழுத்தமின்றி ஒரே கவனத்துடன் கல்வி பயிலவோ, செயலாற்றிடவோ முடியும். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விளையாட்டு ஆர்வத்தினை ஏற்படுத்தும் விதமாக மாவட்டந்தோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.அதனடிப்படையில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று 09.09.2026 முதல் 30.09.2026 வரை மாவட்ட விளையாட்டு அரங்கம் உட்பட 10 இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 வகையான போட்டிகளுடன்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இவ்வாண்டு வில்வித்தை, வுஷீ (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங் மற்றும் நீர் விளையாட்டுகளான கயாக்யிங் (Kayaking) மற்றும் கேனோயிங் (Canoeing) போன்ற புதிய விளையாட்டுக்களையும்  சேர்க்க உத்தரவிட்டுள்ளார்கள். எனவே, இவ்வாண்டு 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 3000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 2000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 1000 ரூபாயுடன் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 1,00,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 75,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 50,000 ரூபாயும் வழங்கப்படும். குழுக்களுக்கு இடையே நடைபெறும் போட்டிகளுக்கு முதல் பரிசாக 75,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 50,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 25,000 ரூபாயும் வழங்கப்படும். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்கள் உங்களது முழு திறனையும் வெளிபடுத்தி வெற்றி பெற்று நமது மாவட்டத்திற்கும் உங்களது பெற்றோருக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமரமணிமாறன், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 10, 2026

அமைச்சர் அவர்கள், சிவகாசி சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைபாடு மற்றும் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் 25 சிறப்பு பள்ளி மாணாக்கர்களுக்கு ரூ.2.21 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார்.

 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைபாடு மற்றும் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில்  (09.09.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், 20 மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு தலா ரூ.6000/- மதிப்பில் காதொலி கருவிகளையும், 4 மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு தலா ரூ.6500/- மதிப்பில் சக்கர நாற்காலிகளையும், 1 மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ.65,000/- மதிப்பில் மின்கலன் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியையும் என மொத்தம் 25 சிறப்பு பள்ளி மாணாக்கர்களுக்கு ரூ.2.21 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், அவர்களுக்கு கல்வி, பயிற்சி, பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கிடைப்பதை உறுதி செய்து வருகிறது. அந்த வகையில், சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேவைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த ஆய்வின்போது, பள்ளியில் செவித்திறன் குறைபாடு மற்றும் மன வளர்ச்சி குறைபாடுகளுடன் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்வித்திறனை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் கற்பித்தல் முறைகள், தனித்திறன் வளர்ப்புப் பயிற்சிகள், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் வழங்கப்படும் பயிற்சிகள், பள்ளியின் வகுப்பறைகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட தேவைகள் குறித்து கேட்டறிப்பட்டது.  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வியுடன் இணைந்து தன்னம்பிக்கை, சுயசார்பு மற்றும் சமூகத்தில் சம வாய்ப்புடன் வாழ்வதற்குத் தேவையான திறன்களை வளர்ப்பது மிகவும் முக்கியமானது.  மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து அதற்கேற்ற பயிற்சிகளை வழங்குவதுடன், அவர்களை தன்னம்பிக்கையுடன் சமூகத்தில் முன்னேறச் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.  பின்னர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாதம் - 2026 முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சியினை  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் பார்வையிட்டார்.இந்த நிகழ்வின் போது, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி  திட்ட அலுவலர் திருமதி ஷீலா, அரசுத்துறை துறை அலுவலர்கள், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Sep 10, 2026

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு எப்.எல் -1 / எப்.எல் -2 / எப்.எல் -3 / எப்.எல் -3A / எப்.எல் -3AA / மற்றும் எப்.எல் -11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்  எப்.எல் -1/ எப்.எல் -2/ எப்.எல் -3/ எப்.எல் -3A/ எப்.எல் -3AA மற்றும் எப்.எல் -11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, 69 வது இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு இணைப்பில் குறிப்பிட்டுள்ள உரிம ஸ்தலங்களை 10.09.2026 (வியாழக்கிழமை) மற்றும் 11.09.2026 (வெள்ளிக்கிழமை) அன்று வழிதடங்களில் உள்ள மதுபானக் கடைகளை தற்காலிகமாக மூடிட உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் எப்.எல் -1/ எப்.எல் -2/ எப்.எல் -3/ எப்.எல் -3A/ எப்.எல் -3AA மற்றும் எப்.எல் -11    ஆகிய மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது   Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 09, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.16 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (08.09.2026) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.16 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் சமூக சமநிலையுடன் வாழவும், பிறர் துணையின்றி தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளவும் தன்னம்பிக்கையுடன் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மாற்றுத்திறனாளிகளின் தேவைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தந்திடும் வகையில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. மேலும், அவர்களின் நலன் கருதி கோட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படைத் தேவைகளான உதவி உபகரணங்கள், சுய தொழில் தொடங்கிட மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் உதவி, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை, மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் போன்றவற்றிற்கான மனுக்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வு காணப்படும்.மேலும், வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம், இலவச வீட்டு மனைப்பட்டா, தாட்கோ, மாவட்ட தொழில் மையம் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுதவி போன்றவற்றிற்கான மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.அதனடிப்படையில் இன்று நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 203 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மேலும்,  ரூ.1.85 இலட்சம் மதிப்பிலான செயற்கைக் கால் 1 மாற்றுத்திறனாளிக்கும், ரூ.26,000 மதிப்பீட்டில் காதொலி கருவிகள் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், ரூ.2,400 மதிப்பிலான கால் தாங்கிகள் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், ரூ.3,000 மதிப்பிலான மடக்கு குச்சிகள் 2 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,16,400 மதிப்பீட்டிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.மேலும், முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு கண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதை உறுதி செய்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முகாமில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி ப்ரிதௌஸ் பாத்திமா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி மோகனா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் திரு.பிரம்ம நாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 143 144

AD's



More News