25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 24, 2026

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள், சமூக நலன் மற்றும் மகளில் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணையினை வழங்கினார்கள்.

 தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில், விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர், எ.எ.எ. பொறியியல் கல்லுரியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணையினை (22.08.2026) வழங்கினார்கள்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசானது இளைஞர்களால் உருவாக்கப்பட்ட மக்களுக்களின் நலன் காக்கும் அரசாகும். பெண்களுக்கு அனைத்து வகைகளிலும் சம உரிமை வழங்கிட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.பெண்கள் வீட்டிலேயே முடங்கி இருக்காமல் உங்களது திறமைக்கேற்ற பணியினை பெற்று பிறர் துணை  இல்லாமல் சுயமாக முன்னேற வேண்டும்.நான் விருதுநகரில் ஷத்திரியா வித்யாலயா பள்ளியில் தமிழ் வழியில் பயின்றேன். பின்னர் எனக்கு புள்ளியல் துறை சார்ந்து ஆர்வம் ஏற்பட்டதனால் எனது கனவினை நிறைவேற்ற மதுரைக்குச் சென்று மேல்படிப்பிற்காக நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். நான் கல்லூரி முடித்தவுடன் எனது பெற்றோர் தங்களது சமூக பொறுப்பினை நிறைவேற்றும் விதமாக எனக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். அந்த நேரத்தில் நான் எனது லட்சியங்களை தெரியப்படுத்தி அதனை நோக்கி எனது பயணத்தினை தொடங்கினேன்.வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை குழுவாக இணைந்து செயல்படுத்தினோம். இருந்தாலும், பொதுமக்களுக்கு நேரடியாக திட்டங்களை உருவாக்கும் இடத்தில் நாம் இருந்தால் இதை விட அதிகப்படியான திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதனை கருத்தில் கொண்டு அரசியல் பயணத்தினை தொடங்கினேன். அரசியல் நிலை அறியும் வண்ணம் அந்த தேர்தல் குழுவுடன் இணைந்து ஆந்திரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பணியாற்றிய பொழுது நாமே அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றுவது சிறப்பாக இருக்கும் என திட்டமிட்டு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  முன்னிலையில் களத்திற்கு வந்தேன். எனது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சமூக வலைதளத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துச்சென்றேன். இதில் நல்ல மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எவ்வித எதிர்மறை கருத்துகளுக்கும் செவி சாய்க்காமல் மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதைப்போல் நானும் செயல்பட்டு வருகிறேன்.இங்கு வேலை நாடி வந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதோடு நின்றுவிடாமல் நீங்கள் தொழில் முனைவோர்களாக முன்னேறி பல நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பவராக உருவாக வேண்டும். பல்வேறு தொழில் நிறுவனங்கள் வாயிலாக ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அதன்வாயிலாக அதிகமான தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலை துவக்கும் நேரங்களில் கூடுதலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.இதனை இளைஞர்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் உயரிய நோக்கத்துடனும், இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு, சுயதொழில் வாய்ப்பு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் போன்றவற்றிற்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.படித்து முடித்த இளைஞர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பினை விரைவாகவும், எளிதாகவும் பெற்றிட அரசு பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வேலை நாடுநர்களின் கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இளைஞர்களின் தொழில்திறனை மேம்படுத்தி தொழில் முனைவோர்களாக உருவாக்கவும், தனியார் தொழில் நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையானது, வேலைதேடும்  இளைஞர்களை, மனித வளம் நாடும் தொழில் நிறுவனங்களுடன் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது. மாவட்டந்தோறும் தொழில் நிறுவனங்களின் தேவைகளையும், இளைஞர்களின் திறன்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றது முதல் 10 பெரிய வேலைவாய்ப்பு முகாம்களும், 118 சிறிய வேலைவாய்ப்பு முகாம்களும், மொத்தம் 128 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.வேலைவாய்ப்பு முகாம்களின் மூலம் 405 மாற்றுத்திறனாளிகள் உட்பட 16,961 வேலைநாடுநர்கள் பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.தற்போது, நடைபெற்று கொண்டிருக்கும் இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் தொழில் நிறுவனங்களுக்கு  தேவையான அலுவலர்களையும், பணியாளர்களையும் தேர்வு செய்கின்றனர்.மேலும், தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு  இணைய தளமானது வேலைதேடும் இளைஞர்களுக்கும், தனியார் தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான நம்பகமான இணைப்பு தளமாக உள்ளது. இதில் 5,93,186 வேலைநாடுநர்களும், 13,436 தனியார்துறை நிறுவனங்களும் பதிவு செய்துள்ளன. இந்த இணையதளத்தின் வாயிலாக 58,226 நபர்கள் தனியார்துறையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.படித்த இளைஞர்கள் அரசுப்பணிக்காக பல்வேறு தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிடும் வகையில் அரசின் சார்பில் இலவசபயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக 150 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு 7,668 தேர்வர்கள் கலந்துகொண்டுள்ளனர். நேரடியாக பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க இயலாதவர்களுக்கு தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மறுஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடத்தப்படுகிறது.வேலை வாய்ப்பினை உருவாக்குவது மட்டுமல்லாமல் ஒவ்வொரு இளைஞரையும் திறன் மிக்க தன்னம்பிக்கை கொண்ட பொருளாதார வளமிக்க குடிமகனாக உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.மாவட்டந்தோறும் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், தொழில் நிறுவனங்களுடன் நீடித்த கூட்டாண்மைகளை உருவாக்குதல், திறன் மேம்பாட்டு பயிற்சிகளை விரிவுபடுத்துதல், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வெளிப்படையான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.நமது மாவட்டத்தில் சிறப்பு முன்னெடுப்பாக விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு அல்லது தனியார் துறையில் வேலைவாய்ப்பினை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் கதிரதிகாரம் என்னும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் படித்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த 19 நபர்களுக்கு தலா ரூ.25,000 மாத ஊதியத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவயதில் குற்றம் புரிந்து மனம்திருந்தியவர்களுக்கு நிரந்தர வருவாய் ஈட்டும் திறனை உருவாக்கித் தரும் விதமாக உயிர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அதிகமாக இளைஞர்கள் பயன்பெற்று வருகின்றனர்.இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நன்கு பயன்படுத்தி தங்களது எதிர்காலத்தை வளமாக்கி கொள்ள வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி  அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் திரு.சு.இலக்குவன், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குநர் திரு.சண்முகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி ஞானபிரபா உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Aug 24, 2026

கால்நடைகளுக்கான சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம்.

 தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S, தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், முன்னிலையில், விருதுநகர் மாவட்டம், பாப்பாகுடியில்  கால்நடைகளுக்கான சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாமினை (22.08.2026) தொடங்கி வைத்தார்கள்.பின்னர், 24 கால்நடை வளர்ப்போர்களுக்கு தாது உப்பு கலவை, சீமைப்புல் கரணைகளையும், சிறந்த கிடாரி கன்று மேலாண்மைக்காக 3 பயனாளிகளுக்கு பரிசுகளையும், சிறந்த மேலாண்மை முறையில் கால்நடை வளர்க்கும் 5 பயனாளிகளுக்கு பரிசுகளையும்  அமைச்சர் பெருமக்கள் அவர்கள் வழங்கினார்கள்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய பொதுமக்களின் நலன் கருதியும், கிராமப்புற பொருளாதாரத்தினை பாதுகாத்துக்கொண்டிருக்கும் முக்கிய தொழில்களில் ஒன்றான கால்நடை வளர்ப்பினை பாதுகாத்திட பல்வேறு திட்டங்களை கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறார்.கால்நடைகளை நோய்தாக்குதலிலிருந்து பாதுகாத்திடும் வகையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களை தமிழகமெங்கும் 388 ஊராட்சி ஒன்றியங்களில் 6,984 சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தரவிட்டு அதற்காக 7.63 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்கள்.அதனடிப்படையில், 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 18 முகாம்கள் வீதம் 198 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.சிறப்பு முகாம்களின் மூலம் 1,65,850 கால்நடைகளும், 3,092 எருமையினங்களும், 5,45,991 வெள்ளாடுகளும், 5,80,489 செம்மறியாடுகளும், 17,10,958 கோழிகளும் பயனடையும்.முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், மடி வீக்க நோய் மேலாண்மை, குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கெதிரான தடுப்பூசி, ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு மற்றும் சுண்டு வாத அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.முகாமில் கலந்து கொள்ளும் கால்நடைகளுக்கு தாது உப்புக்கலவை, 1 கிலோ எடையுள்ள சத்துப்பவுடர் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகள் தங்களது பெயர்களை பதிவு செய்து கால்நடைவளர்ப்புக்குத் தேவையான தீவனப் புல் விதைகளை பெற்றுக்கொள்ளலாம். முகாம் நடைபெறும் இடம், நாள், பங்கேற்கும் மருத்துவ குழுவினர் குறித்த விவரங்கள் முன்கூட்டியே ஊராட்சிப்பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். இது குறித்து துண்டு பிரசுரங்கள், ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் இச்சிறப்பு முகாமினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என  அமைச்சர் பெருமக்கள்  அவர்கள் தெரிவித்தனர்.இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குநர் மரு.ம.சு.சரவணன், உதவி இயக்குநர் பா.கார்த்திக்  கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 24, 2026

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஒப்பந்த பணிகளை பெற புதிய வணிக நிறுவனங்கள் பங்குபெறும் வகையில் விற்பனையாளர் மேம்பாட்டு கண்காட்சி நடைபெறவுள்ளது .

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில்,  மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் மேம்பாட்டு அலுவலகம், சென்னை சார்பில் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  சிறு தொழில் நிறுவனங்களை அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதல் தேவைகளுடன் நேரடியாக இணைத்து, புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் உருவாவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதன் மூலம் மாவட்ட தொழில் நிறுவனங்கள் தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளை நேரடியாக அறிமுகப்படுத்துவதுடன், நிறுவனங்களின்  கொள்முதல் தேவைகளை அறிந்து கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை அடையாளம் காணவும், விற்பனையாளர் பதிவு மற்றும் அரசு கொள்முதல் நடைமுறைகள் தொடர்பான தகவல்களைப் பெறவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.நமது மாவட்டத்தில் உற்பத்தியாகும் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத்தொழில் உணவு பொருட்கள் பதப்படுத்துதல், அட்டைபெட்டி, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள், மருத்துவ கட்டுத்துணிகள், ரப்பர், பொறியியல் உதிரிபாகங்கள், மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தித் நிறுவனங்களுடன் சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களும் தங்களுக்கு ஏற்ற வாய்ப்புகளைத் தேர்வு செய்யலாம்.மேற்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் தகுதியான நிறுவனங்களுக்கு, சம்பந்தப்பட்ட அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் விதிமுறைகள் மற்றும் தகுதித் தேவைகளுக்கு உட்பட்டு சோதனை கொள்முதல், விருப்பக் கடிதம், விற்பனையாளர் பதிவு மற்றும் தொடர் கொள்முதல் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.இந்நிகழ்வில் உருவாகும் தொழில் தொடர்புகள் இந்தநிகழ்ச்சியுடன் முடிவடையாமல், அவற்றை தொடர்ந்து முன்னெடுத்து நடைமுறை வணிக வாய்ப்புகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடக்கூடிய காரணிகளை உருவாக்குவதே இந்நிகழ்ச்சியின் முதன்மை நோக்கமாகும்.மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் மேம்பாட்டு அலுவலகம் - சென்னை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு, விருதுநகர் மாவட்ட தொழில் மையம் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலகங்கள் இணைந்து இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளன.எனவே, விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தர, உற்பத்தி, சேவை, மற்றும் வர்த்தக நிறுவனங்களும் இவ்வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் புதிய வணிகத் தொடர்புகளை உருவாக்கி அதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 22, 2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 16 விவசாயிகளுக்கு கணினி திருத்த பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் (21.08.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 16 விவசாயிகளுக்கு கணினி திருத்த  பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்தனர். கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.விவசாயிகளுக்கு 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான கரும்பு ஊக்கத்தொகை அனைத்தும் வழங்கப்பட்டு விட்டன. அதேபோல், இவ்வாண்டிற்கான கரும்பு ஊக்கத்தொகையானது  அரசாணை பெறப்பட்டவுடன் வழங்கப்படும். மேலும், UDR -இல் ஏற்பட்ட பிழையினையும் திருத்த வேண்டும். விவசாயிகளுக்கான அடங்கல் சான்றிதழை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தினை  தடுப்பதற்கு  வனத்துறை விவசாயிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளான அரசின் மூலம் கூடுதலான கண்மாய்களை  தூர் வாருவதற்கான நடவடிக்கை, மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளை  நிறுவுதல், மழை நீரை முழுவதுமாக சேமித்திட வரத்து வாய்க்கால்களை தூர்வாரி முழு அளவில் தயார் செய்தல், பொது இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை தனியார் பங்களிப்புடன் அகற்றிடுதல், மின்கம்பங்கள் மாற்றுவது குறித்த மனுக்களுக்கு தீர்வு காணுதல், சாலை பணிகளுக்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையினை விவசாயிகளுக்கு வழங்குதல், கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நகைகளை திரும்ப உரியவரிடம்  ஒப்படைத்தல் உள்ளிட்ட  கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், மாவட்டத்தில் 3826.7 மெட்ரிக் டன் யூரியாவும், 1927.4 மெட்ரிக் டன் டி.ஏ.பியும், 269.2 மெட்ரிக் டன் முயூரெட் ஆப் பொட்டாசும், 2330.1 மெட்ரிக் டன் கலப்பு உரமும், 357.4 மெட்ரிக் டன் சிங்கிள் சூப்பர் பஸ்பேட் உரமும் என மொத்தம் 8711 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளது. இதனை, விவசாயிகள் பெற்றுக்கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் துணை இயக்குனர்(மேகமலை புலிகள் காப்பகம் திருவில்லிபுத்தூர்) திரு.ரவி மீனா இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி,   வேளாண்மை இணை இயக்குநர் திரு.சௌமியன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.திருப்பதி, வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அ.அம்சவேணி, கோவிலாங்குளம் வேளாண் அறிவியல்  நிலையம் பேராசிரியர் மற்றும் தலைவர் திரு.ராமசுப்பிரமணியன், தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.ஆறுமுகம், வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம் மற்றும் விற்பனை) திருமதி த.வளர்மதி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி  இந்திரா, உட்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Aug 22, 2026

நான்கு வழிச்சாலைக்காக நிலம் வழங்கி இழப்பீடு பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டம் வடுகபட்டி – தெற்குவெங்காநல்லூர் வரை தேசிய நெடுஞ்சாலை - 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய நில உடைமைதாரர்களிடமிருந்து ஆவணங்களை பெற்று கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கும் பொருட்டு நில உடைமைதாரர்களிடமிருந்து நில ஆவணங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவலங்களில் நடைபெற உள்ளது.         அதனடிப்படையில், இராஜபாளையம் வட்டத்தில் 01.09.2026 மேலூர்துரைசாமிபுரம் கிராமத்திலும், 03.09.2026 இளந்திரைகொண்டான் கிராமத்திலும், 08.09.2026  புத்தூர்  கிராமத்திலும், 10.09.2026 சமுசிகாபுரம் கிராமத்திலும், 11.09.2026 தெற்குவெங்காநல்லூர் கிராமத்திலும், 15.09.2026 மேலராஜகுலராமன் கிராமத்திலும்,            திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 01.09.2026 நத்தம்பட்டி கிராமத்திலும், 03.09.2026 அத்திகுளம் செங்குளம் கிராமத்திலும், 08.09.2026 அயன் நாச்சியார்கோவில், நல்லிங்கப்பேரி, தெய்வேந்திரி கிராமத்திலும், 10.09.2026 பூவாணி, முத்துவெங்கட்ராயபுரம் கிராமத்திலும், 11.09.2026 களத்தூர், எஸ்.அம்மாப்பட்டி, வடுகப்பட்டி கிராமத்திலும், 15.09.2026 பிள்ளையார்குளம் கிராமத்திலும், 17.09.2026 குன்னூர் கிராமத்திலும், 22.09.2026 விழுப்பனூர், பாட்டக்குளம் சல்லிப்பட்டி கிராமத்திலும், நடைபெற உள்ளது.           ஆகவே, தேசிய நெடுஞ்சாலை – 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான உரிமை குறித்த ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்காத நிலஉடைமைதாரர்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Aug 20, 2026

திருவில்லிபுத்தூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  (19.08.2026) கள ஆய்வு செய்தார்.மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் அரசின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள்ஊரில்"என்றதிட்டம்செயல்படுத்தப்பட்டுவருகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட  அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் முகாமானது இன்று 19.08.2026 காலை 09.00 மணி முதல் மறுநாள் 20.08.2026 அன்று காலை 09.00 மணி வரை நடைபெற்று வருகிறது.முதல் நாளான இன்று(19.08.2026) திருவில்லிபுத்தூர் நகராட்சி திரு.வி.க அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு, அங்கன்வாடி மையம், கீழரத வீதி நியாய விலைக்கடை  உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.பின்னர், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்  அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடி  அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை  மேம்படுத்தவும் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு) திருமதி வானதி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S., தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத்திட்டம்) திருமதி மோகனா, திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் திரு.அருளானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , அனைத்துத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 20, 2026

”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ், இரண்டாம் நாளான இன்று (20.08.2026) அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கள ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டார பகுதிகளில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“  திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேற்று 19.08.2026 காலை 09.00 மணி முதல் இன்று 20.08.2026 அன்று காலை 09.00 மணி வரை  பல்வேறு துறைகளின் மூலம்  செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் அரசின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் கள ஆய்வு மேற்கொண்டார்.அதன் படி இரண்டாம் நாளான  (20.08.2026) அதிகாலை திருவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் நகராட்சியின் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் குறித்தும், திருவில்லிபுத்தூர் உழவர் சந்தை மற்றும் எரிச்சநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள்,  அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்தவும் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வுகளில் திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர், குடிநீர், வடிகால் வாரியம் அலுவலர்கள், திருவில்லிபுத்தூர் நகராட்சி வட்டாட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 20, 2026

பயிர் சாகுபடியில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பயன்பாட்டினை குறைப்பது குறித்து விவசாயிகளுக்கு நடைபெற்ற தொழில்நுட்ப கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டாரம், பருத்தி ஆராய்ச்சி மையத்தில் பயிர் சாகுபடியில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பயன்பாட்டினை குறைப்பது குறித்து விவசாயிகளுக்கு நடைபெற்ற தொழில்நுட்ப கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள்  (19.08.2026) தொடங்கி வைத்தார்.இக்கருத்தரங்கில் கிஸான் மேளா/வேளாண்மை உழவர்நலத்துறை திட்டங்கள் குறித்த விவசாயிகளுக்கான கருத்துக் காட்சி மற்றும் கண்காட்சிகளும்  அமைக்கப்பட்டிருந்தது. கிஸான் மேளாவில் திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 50 விவசாயிகள், இராஜபாளையம் வட்டாரத்தில் - 25 விவசாயிகள்,வத்திராயிருப்பு வட்டத்தில் - 25  விவசாயிகள், சிவகாசி வட்டாரத்தில் -25 விவசாயிகள், மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரத்தில் -25 விவசாயிகள் என ஆக மொத்தம் 150 - விவசாயிகள் பங்கேற்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மைதுறை பயிர்கள் 1,07,975 எக்டர் பரப்பளவிலும்,  தோட்டக்கலை பயிர்கள் 26,000 எக்டர் பரப்பளவிலும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகள் அதிகளவில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். விவசாயிகள் தங்களது சாகுபடி செலவில் 40 சதவிகிதம் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு செலவிடுகின்றனர். இரசாயன உரங்களை அளவுக்கு அதிகமாகவும், சமநிலையற்ற முறையிலும் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் குறைதல், மண் நுண்ணுயிர்களின் செயல்பாடு பாதித்தல், நீர்நிலைகள் மாசுபடுதல் போன்ற இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகின்றன.எனவே, இரசாயன உரங்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையைப் பின்பற்ற வேண்டும். அதனடிப்படையில், இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டினை குறைப்பதற்கான விழிப்புணர்வு கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற்று வருகிறது. இரசாயன உரப் பயன்பாட்டினை குறைக்க இயற்கை உரங்களான பசுந்தாள் உரம், மண் புழு உரம், மக்கிய தொழு உரம், பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம் மற்றும் பூச்சி மருந்துக்கு மாற்றாக இயற்கை பூச்சி விரட்டிகளான வேப்ப எண்ணெய், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி மையம் அமைத்திட மானியம் மற்றும் இயற்கை விவசாயக் குழுவிற்கு சாகுபடி மானியம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது. மேலும், விவசாயிகள் மண் பரிசோதனை செய்து நவீன உர மேலாண்மையை பின்பற்றி இடுபொருட்கள் செலவினை குறைத்து தங்களின் வருமானத்தினையும் அதிகரிக்கலாம். இனி வரும் காலங்களில் இயற்கை விவசாயத்தை பின்பற்றி நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்ய விவசாயிகள் அனைவரும் முன்வர வேண்டும்.அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை வழிவகுத்து செயல்படுத்தி வருகிறது. எனவே, விவசாயிகள் அனைவரும் அரசின் நலத்திட்டங்களை பின்பற்றி தங்களின் வாழ்வாதரங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திருமதி அ.அம்சவேணி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Aug 19, 2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவிலில் ரூ.23.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உட்கட்டமைப்பு வசதிகளை பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.23.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முடி காணிக்கை மண்டபம், அன்னதான மண்டபம், விருந்து மண்டபம், 235 கடைகள் உள்ளிட்ட பல்வேறு புதிய உட்கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் குத்துவிளக்கேற்றி, புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, திருக்கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், பழமையான திருக்கோவில்களின் ஆன்மிகப் பெருமையையும் பாதுகாத்து, அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவில் தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது. இத்திருக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவிழா மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதன் ஒரு பகுதியாக, பக்தர்கள் நேர்த்திக்கடனான முடி காணிக்கை செலுத்துவதற்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நவீன வசதிகளுடன் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபமும், திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட முறையில் சுகாதாரமான மற்றும் வசதியான முறையில் அன்னதானம் வழங்கும் வகையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அன்னதான மண்டபமும்,திருக்கோவில் சார்ந்த நிகழ்வுகள், தனியார் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படும் வகையிலும் ரூ.8.44 கோடி மதிப்பீட்டில் விருந்து மண்டபமும், திருக்கோவில் வளாகத்தில் உள்ள வணிக நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படுவதுடன், பக்தர்களுக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் எளிதாக வாங்கிக் கொள்ளும் பொருட்டு ரூ.12 கோடி மதிப்பீட்டில் 235 கடைகளும் என மொத்தம் ரூ.23.67 கோடி மதிப்பீட்டில் புதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டதன் மூலம், அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மற்றும் கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. மேலும், திருக்கோவில் வளாகத்தின் பயன்பாட்டுத் திறன் மேம்படுவதுடன், பக்தர்களின் வருகையை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு தேவையான சேவைகளை ஒருங்கிணைந்த முறையில் வழங்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்வில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் திரு.ராமமூர்த்தி, செயல் அலுவலர் திரு.இளங்கோ, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், திருக்கோவில் நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Aug 19, 2026

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 2, 2அ (TNPSC Group-II / II A) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. விருப்பமுள்ள தேர்வர்கள் பங்கேற்கலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 2, 2அ(TNPSC Group-II / II A) தேர்விற்கான அறிவிக்கை 11.08.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.  இத்தேர்வின் மூலம் 821 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 09.09.2026 ஆகும்.விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்கள் போட்டித்தேர்வில் சிறப்பாகத் தயாராகி வெற்றி பெறும் வகையில், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் 20.08.2026 வியாழக்கிழமை முதல், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.இப்பயிற்சி வகுப்பில் திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு, தேர்வின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப பாடவாரியான பயிற்சிகள், தேர்வு நுணுக்கங்கள் மற்றும் வினா அணுகுமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படும். மேலும், தேர்வர்களின் தொடர் தயாரிப்பிற்கு உதவும் வகையில் இலவச  வை-பை (Wi-Fi) வசதியுடன் கூடிய நூலகம் மற்றும் கணினி வசதிகள் அலுவலகத்தில் உள்ளன. பயிற்சியின் ஒரு பகுதியாக இலவச பாடவாரியானத் தேர்வுகள் மற்றும் முழுமாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வர்களின் முன்னேற்றம் மதிப்பீடு செய்யப்படும்.இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம் அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அணுகி தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 2, 2அ (TNPSC Group-II / II A) தேர்விற்குத் தயாராகும் விருதுநகர் மாவட்டத் தேர்வர்கள், இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 138 139

AD's



More News