விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டார பகுதிகளில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்றுள்ள பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் தலைமையில், சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் செல்வி கே.சங்கீதா .I A S., அவர்கள் (07.08.2026) ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசு சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் (Special Area Development Programme) மேற்கு தொடர்ச்சி மலை திட்டப்பகுதிகளான உதகமண்டலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் மூலம் மலைப்பாங்கான மற்றும் குறிப்பிட்ட பின்தங்கிய பகுதிகளில் மண் அரிப்பைத் தடுத்தல் மற்றும் நீர் வளத்தைப் பெருக்குதல், முழுமையான நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்புப் பணிகள், மலைப் பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் பொதுமக்களின் வாழ்விட மேம்பாட்டிற்கான சமுதாயக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பிற பொதுக் கட்டிடங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டாரப் பகுதிகளில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2023- 24 இன் கீழ் ரூ.1.51 கோடியில் 3 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2024- 25 இன் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.7.22 கோடி மதிப்பிலான 34 பணிகளில் 29 பணிகளும், 2025- 26 இன் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2.65 கோடி மதிப்பிலான 3 பணிகளில் 2 பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.ஆக மொத்தம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.11.38 கோடி மதிப்பிலான 40 திட்டப்பணிகளில், ரூ.8.16 கோடி மதிப்பிலான 34 திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவில்லிபுத்தூர் வட்டார பகுதி விழுப்பனூர் ஊராட்சியில் ரூ.37.83 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள், அத்திக்குளம்-செங்குளம் கிராமத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது என தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, பணிகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தரமான முறையில் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்தும், பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தரத்துடன் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும், பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, திட்டத்தின் முழுப் பயனும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர்(சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம், மதுரை) திரு.ரமேஷ்குமார், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் திரு.அருளானந்தம், தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள், பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (Pradhan MantriShram Yogi Maandhan – PM-SYM) என்ற ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் அவர்களின் சமூகப்பாதுகாப்பும், பொருளாதார நிலைத்தன்மையும் உறுதி செய்யப்படுகிறது.பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (Pradhan MantriShram Yogi Maandhan – PM-SYM) திட்டம் என்பது 18 முதல் 40 வயது வரையிலான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இந்திய அரசின் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத்திட்டமாகும். இத்திட்டத்தில் மேற்கண்ட தகுதியுடைய பயனாளிகள் மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை முறையாக செலுத்தி வந்தால், இந்திய அரசும் அதே அளவு இணைப்பங்களிப்பை வழங்கும். இதன் மூலம், 60 வயதை அடைந்த பின்னர் மாதந்தோறும் ரூ.3,000/- உறுதியான ஓய்வூதியம் பெறும் வசதி வழங்கப்படுகிறது.சுற்றுலா வழிகாட்டிகள்(Tourist Guides), சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் (Facilitators), சுற்றுலா வாகனஓட்டுநர்கள் (Tourist Transport Operators) மற்றும் போக்குவரத்து சேவை வழங்குநர்கள், விடுதி மற்றும் விருந்தோம்பல்துறை பணியாளர்கள் (Hospitality Workers), துப்புரவுப் பணியாளர்கள் (House Keeping Staffs), கைவினைக் கலைஞர்கள் (Artisans), தெருவோர வியாபாரிகள் (Street Vendors), உணவக மற்றும் உணவுச் சேவை வழங்குநர்கள் (Hotel Workers). மேலும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பிறசேவை வழங்குநர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியுடையவர்களாவர்.எனவே, விருதுநகர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா சங்கங்கள், விடுதி உரிமையாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தகுதியுடைய தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கிடவும்,தகுதியுடைய அனைத்து தொழிலாளர்களும் தங்களது ஆதார் அட்டை, சேமிப்பு வங்கி கணக்குப் புத்தகம் (Bank Passbook) மற்றும் கைப்பேசி எண்ணுடன், அருகிலுள்ள பொது சேவை மையத்தை (Common Service Centre - CSC) அணுகி, இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.மேலும், விபரங்களுக்கு சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், அறை எண்.522, 5-வது தளம், புதிய மாவட்ட ஆட்சியரகம், அல்லது 7397715688 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட VVPAT - வாக்குப்பதிவு இயந்திரத்தில் மீதமுள்ள paper roll - களை அகற்றும் பணிக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிட்டங்கியினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் (06.08.2026) திறந்து வைத்தார்.தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026-இல், விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 தொகுதிகளில் நடைபெற்றது.அதன்படி, இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 269 விவிபேட் இயந்திரங்களும், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 308 விவிபேட் இயந்திரங்களும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 291 விவிபேட் இயந்திரங்களும், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 290 விவிபேட் இயந்திரங்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 281 விவிபேட் இயந்திரங்களும், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 270 விவிபேட் இயந்திரங்களும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 292 விவிபேட் இயந்திரங்கள் என மொத்தம் 2,001 விவிபேட் இயந்திரங்களில் உள்ள வெப்ப உணர் காகித சுருள்களை (VVPAT Paper Roll-Thermal Paper) அகற்றும் பணிகள் இன்று (06.08.2026) முதல் தொடங்கி 7 நாட்கள் நடைபெறவுள்ளது.மேலும், பழுதடைந்த 308 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களுரூ, பெல் நிறுவனத்திற்கு அனுப்பிவைப்பதற்கான பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 18.08.2026 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதவி ஆட்சியர் சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் அவர்களின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.கோட்ட அளவிலான கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் மற்றும் தனி நபர் தொடர்பான மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக அளித்து தீர்வு காணவும், வட்டார அளவிலான விவசாயம் மற்றும் விவசாயம் சாராத மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு, அந்த மனு மீதான நடவடிக்கை விபரத்தினை மனுதாரருக்கு தெரிவித்திடவும் அனைத்து துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S.,அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம் மற்றும் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் பிரச்சித்தி பெற்ற பிரார்த்தனை திருத்தலமாகும். இத்திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இத்திருவிழா 06.08.2026 முதல் 14.08.2026 வரை நடைபெறுகிறது. 14.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது.அதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் 14.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று விருதுநகர் மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் மாதத்தின் 5 வது சனிக்கிழமை (29.08.2026) அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (05.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, பக்தர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக இருக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் மற்றும் வயதானவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனுக்குடன் வழங்க சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் எவ்வித இடையூறுமின்றி செல்வதற்கு ஏற்றவாறு பாதைகளை அமைத்திட வேண்டும். திருவிழாவிற்கு வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை தேவையான இடங்களில் ஏற்படுத்தி வைக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான கழிப்பிட வசதிகளும், தற்காலிக கழிப்பிட வசதிகளையும் அமைத்திட வேண்டும். பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தி தரிசனம் செய்திட காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், தற்காலிக கடைகள் மற்றும் அன்னதானம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கும் உணவு வகைகள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி வழங்கப்படுகிறதா என ஆய்வாளர்கள் சுழற்சி முறையில் கண்காணித்து அதனை உறுதி செய்திட வேண்டும். வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வண்ணம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்புகள் வழங்க வேண்டும். பக்தர்கள் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு நெகிழி (Plastic) பைகளைப் பயன்படுத்துவதை தவிர்த்து அதற்குப் பதிலாக மஞ்சப்பை அல்லது மக்கும் காகித பைகளைப் பொதுமக்கள் பயன்படுத்திட வேண்டும். தாணிப்பாறை அடிவாரத்தில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்கு தேவையான துப்புரவு பணியாளர்கள் பணியாற்றிட இருக்க வேண்டும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளை பெறுவதற்கு ஏதுவாக அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட வேண்டும். சதுரகிரிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கேற்ப மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கையும், வெளியூர் பேருந்துகள், தனிநபர்களுக்கு சொந்தமான வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக வாகன நிறுத்தங்களும், தேவையான இடங்களில் CCTV-கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பாளர்களால் கண்காணிக்கப்பட வேண்டும்.எனவே தொடர்புடைய அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு அனைத்து பணிகளையும் திருவிழாவிற்கு முன்னதாக முடிக்க வேண்டும் எனவும், சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் வனப்பகுதிக்குள் சென்று சாமி தரிசனம் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்,இ.கா.ப., திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டைப்பட்டி ஊராட்சியில் (05.08.2026) செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக வைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சிகளை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் e-KYC பதிவு மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை பயனாளிகளுக்கும் 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய நாட்களில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விற்பனை முனைய இயந்திரம் மூலமாக விரல் ரேகை / கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் e-KYC பதிவு மேற்கொள்ள தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் e-KYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு அனைத்து நியாயலிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.எனவே, e-KYC பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு 08.08.2026 அல்லது 09.08.2026 அன்று நேரில் சென்று e-KYC பதிவு செய்யமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் e-KYC பதிவு செய்யாத எவரேனும் பணிநிமித்தமாக தமிழ்நாட்டின் வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் எனில், அவர்களும் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடகளுக்கு தமது குடும்ப அட்டை விபரத்துடன் சென்று e-KYC பதிவு செய்யலாம்.எனவே, e- KYC பதிவு செய்யாமல் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் அனைவரும் e-KYC சிறப்பு முகாமில் அவசியம் e-KYC பதிவு மேற்கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் e-KYC பதிவு செய்யும் பணி 100% நிறைவு பெற்றிடுவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜீவன் ரக்ஷா பதக் விருதானது வழங்கப்பட்டு வருகின்றது. இவ்விருதானது நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், விபத்துகள், தீ விபத்துகள், மின்சார விபத்துகள், நிலச்சரிவுகள், விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் நடைபெறும் மீட்புப் பணிகள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் மனிதநேயமிக்க செயல்களுக்காக வழங்கப்படுகின்றது.இவ்விருதானது பின்வரும் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக் - மீட்பவரின் உயிருக்கு மிகப் பெரிய ஆபத்து நிலவும் சூழ்நிலைகளில், உயிரைக் காப்பாற்றுவதில் காட்டிய அசாத்திய தைரியத்திற்காக வழங்கப்படும் விருதாகும். உத்தம் ஜீவன் ரக்ஷா பதக் - உயிருக்கு மிகுந்த ஆபத்து நிலவும் சூழ்நிலைகளில், உயிரைக் காப்பாற்றுவதில் காட்டும் துணிச்சல் மற்றும் உடனடிச் செயலுக்காக வழங்கப்படும் விருதாகும். ஜீவன் ரக்ஷா பதக் - மீட்பவருக்குக் கடுமையான உடல் காயம் ஏற்பட்ட சூழ்நிலைகளில், உயிரைக் காப்பாற்றுவதில் காட்டும் துணிச்சல் மற்றும் உடனடிச் செயலுக்காக ஜீவன் ரக்ஷா பதக் வழங்கப்படுகிறது.எனவே, விருதுநகர் மாவட்டத்தினைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதிற்கு விண்ணப்பிக்கலாம். இவ்விருதிற்கு அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும், இராணுவம், காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையில் பணியாற்றி உயிர்காக்கும் வீர தீர செயல் புரிந்தவர்களும் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம். இவ்விருதானது 01.10.2024க்கு பின் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.இவ்விருதிற்கான விண்ணப்ப படிவத்தினை https://www.awards.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 14.08.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்பித்திட வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 04562-225947 அல்லது 7824009970 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் (04.08.2026) தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சியின் வாயிலாக விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நலப்பிரிவு கட்டடத்தினை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தொழில் ,முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தமிழக மக்களின் ஆரோக்கியத்திற்கும், சுகாதார மேம்பாட்டிற்கும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.அதனடிப்படையில் சிவகாசி பகுதி பொதுமக்கள் உயர்தரமான மருத்துவ சேவையினை எவ்வித பொருளாதார செலவுமின்றி உள்ளூரிலேயே தரமான உயர்தர சிகிச்சையினை பெற்று கொள்ளும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இந்த கட்டிடம் காணொலிகாட்சியின் வாயிலாக (04.08.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது.சிவகாசி அரசு மருத்துவமனை தற்போது 140 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 550 வெளி நோயாளிகள், 140 உள் நோயாளிகள், மாதம் ஒன்றுக்கு 120 பிரசவங்கள், 24,509 ஆய்வக பரிசோதனைகள், 161 பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் 318 சிறிய அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைபெற்று வருகிறது.மேலும் இம்மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (TAEI), திறன்மிகு தீக்காய சிகிச்சைப் பிரிவு மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.சிவகாசி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்காக அரசாணை எண்.53 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நாள்:01.03.2024-ன் படி ரூ. 23.75 கோடி மதிப்பில் PM-ABHIM திட்டத்தின் கீழ் 50 படுக்கைகள் கொண்ட Critical Care Block NHM மூலம் 8.7958 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு (Maternal Child Health Wing) இரண்டும் ஒருங்கிணைந்து ரூ.32.54 கோடி மதிப்பீட்டில் ஒரே கட்டிடமாக தரைத்தளம் மற்றம் 6 தளங்களுடன் தீவிர சிகிச்சைப்பிரிவு & மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு (CRITICAL CARE BLOCK & MATERNAL CHILD HEALTH WING) கட்டப்பட்டுள்ளது.மேலும், அந்த கட்டிடத்தில் தரை தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (TAEI), அவசர அறுவை அரங்கு, நுண்கதிர் பிரிவு (Hyperbaric Oxygen Therapy for Burns) மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையம் (Hemodialysis), முதல் தளத்தில் பிரசவ வெளிநோயாளிகள் பிரிவு, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், குடும்ப தல மையம் மற்றும் பிரசவ அறை (LDR Complex). HDU மற்றும் பிரசவ முன்கவனிப்பு பிரிவு (Antenatal Ward), இரண்டாவது தளத்தில் பிரசவ Twin அறுவை அரங்கம், தீவிர சிகிச்சைப்பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு, மூன்றாம் தளத்தில் பொது அறுவை அரங்கம், எலும்புபிரிவு அறுவை அரங்கம், ஆண்கள் அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்புபிரிவு, நான்காம் தளத்தில் பிரசவத்திற்கு பின் கவனிப்பு பிரிவு (Postnatal Ward), மற்றும் Level -1, Level II, Level-III வசதியுடன் கூடிய பச்சிளங்குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப்பிரிவு, ஐந்தாம் தளத்தில் பெண்கள் சிகிச்சைப்பிரிவு, இயன்முறை சிகிச்சைப்பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு, ஆறாம் தளத்தில் ஆண்கள் சிகிச்சைப்பிரிவு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுகள் உள்ளிட்ட வசதிகள் சிறப்பாக அமையப்பெற்றுள்ளது. மேலும், இக்கட்டிடத்தில் Police Outpost Central Oxygen, CCTV, LAN Connection Fire Fighting Equipments, Lift வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இப்புதிய மருத்துவ கட்டிடத்தில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் (Critical Care Block) 50 படுக்கை வசதிகள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவில் (Maternal Child Health Wing) 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில் 150 படுக்கைகள் அதிகரித்து 290 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கூடுதல் கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப் பட்டுள்ளது.இதனை பொதுமக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது ஆரோக்கியத்தினையும், சுகாதாரத்தினையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டுன் என தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் மக்கள் நல பணிகள்) திரு.செந்தில்குமார், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S , துணை இயக்குநர் (மருத்துவமனை மருத்துவ அலுவலர்) திரு.அய்யனார், அரசு அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.