தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள், சமூக நலன் மற்றும் மகளில் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணையினை வழங்கினார்கள்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில், விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர், எ.எ.எ. பொறியியல் கல்லுரியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணையினை (22.08.2026) வழங்கினார்கள்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசானது இளைஞர்களால் உருவாக்கப்பட்ட மக்களுக்களின் நலன் காக்கும் அரசாகும். பெண்களுக்கு அனைத்து வகைகளிலும் சம உரிமை வழங்கிட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
பெண்கள் வீட்டிலேயே முடங்கி இருக்காமல் உங்களது திறமைக்கேற்ற பணியினை பெற்று பிறர் துணை இல்லாமல் சுயமாக முன்னேற வேண்டும்.நான் விருதுநகரில் ஷத்திரியா வித்யாலயா பள்ளியில் தமிழ் வழியில் பயின்றேன். பின்னர் எனக்கு புள்ளியல் துறை சார்ந்து ஆர்வம் ஏற்பட்டதனால் எனது கனவினை நிறைவேற்ற மதுரைக்குச் சென்று மேல்படிப்பிற்காக நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். நான் கல்லூரி முடித்தவுடன் எனது பெற்றோர் தங்களது சமூக பொறுப்பினை நிறைவேற்றும் விதமாக எனக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். அந்த நேரத்தில் நான் எனது லட்சியங்களை தெரியப்படுத்தி அதனை நோக்கி எனது பயணத்தினை தொடங்கினேன்.
வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை குழுவாக இணைந்து செயல்படுத்தினோம். இருந்தாலும், பொதுமக்களுக்கு நேரடியாக திட்டங்களை உருவாக்கும் இடத்தில் நாம் இருந்தால் இதை விட அதிகப்படியான திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதனை கருத்தில் கொண்டு அரசியல் பயணத்தினை தொடங்கினேன். அரசியல் நிலை அறியும் வண்ணம் அந்த தேர்தல் குழுவுடன் இணைந்து ஆந்திரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பணியாற்றிய பொழுது நாமே அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றுவது சிறப்பாக இருக்கும் என திட்டமிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் களத்திற்கு வந்தேன். எனது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சமூக வலைதளத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துச்சென்றேன்.
இதில் நல்ல மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எவ்வித எதிர்மறை கருத்துகளுக்கும் செவி சாய்க்காமல் மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதைப்போல் நானும் செயல்பட்டு வருகிறேன்.
இங்கு வேலை நாடி வந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதோடு நின்றுவிடாமல் நீங்கள் தொழில் முனைவோர்களாக முன்னேறி பல நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பவராக உருவாக வேண்டும். பல்வேறு தொழில் நிறுவனங்கள் வாயிலாக ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அதன்வாயிலாக அதிகமான தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலை துவக்கும் நேரங்களில் கூடுதலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
இதனை இளைஞர்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் உயரிய நோக்கத்துடனும், இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு, சுயதொழில் வாய்ப்பு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் போன்றவற்றிற்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
படித்து முடித்த இளைஞர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பினை விரைவாகவும், எளிதாகவும் பெற்றிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வேலை நாடுநர்களின் கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இளைஞர்களின் தொழில்திறனை மேம்படுத்தி தொழில் முனைவோர்களாக உருவாக்கவும், தனியார் தொழில் நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையானது, வேலைதேடும் இளைஞர்களை, மனித வளம் நாடும் தொழில் நிறுவனங்களுடன் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது. மாவட்டந்தோறும் தொழில் நிறுவனங்களின் தேவைகளையும், இளைஞர்களின் திறன்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றது முதல் 10 பெரிய வேலைவாய்ப்பு முகாம்களும், 118 சிறிய வேலைவாய்ப்பு முகாம்களும், மொத்தம் 128 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.வேலைவாய்ப்பு முகாம்களின் மூலம் 405 மாற்றுத்திறனாளிகள் உட்பட 16,961 வேலைநாடுநர்கள் பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.தற்போது, நடைபெற்று கொண்டிருக்கும் இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அலுவலர்களையும், பணியாளர்களையும் தேர்வு செய்கின்றனர்.
மேலும், தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணைய தளமானது வேலைதேடும் இளைஞர்களுக்கும், தனியார் தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான நம்பகமான இணைப்பு தளமாக உள்ளது. இதில் 5,93,186 வேலைநாடுநர்களும், 13,436 தனியார்துறை நிறுவனங்களும் பதிவு செய்துள்ளன. இந்த இணையதளத்தின் வாயிலாக 58,226 நபர்கள் தனியார்துறையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.படித்த இளைஞர்கள் அரசுப்பணிக்காக பல்வேறு தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிடும் வகையில் அரசின் சார்பில் இலவசபயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக 150 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு 7,668 தேர்வர்கள் கலந்துகொண்டுள்ளனர். நேரடியாக பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க இயலாதவர்களுக்கு தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மறுஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடத்தப்படுகிறது.
வேலை வாய்ப்பினை உருவாக்குவது மட்டுமல்லாமல் ஒவ்வொரு இளைஞரையும் திறன் மிக்க தன்னம்பிக்கை கொண்ட பொருளாதார வளமிக்க குடிமகனாக உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.மாவட்டந்தோறும் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், தொழில் நிறுவனங்களுடன் நீடித்த கூட்டாண்மைகளை உருவாக்குதல், திறன் மேம்பாட்டு பயிற்சிகளை விரிவுபடுத்துதல், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வெளிப்படையான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நமது மாவட்டத்தில் சிறப்பு முன்னெடுப்பாக விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு அல்லது தனியார் துறையில் வேலைவாய்ப்பினை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் கதிரதிகாரம் என்னும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் படித்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த 19 நபர்களுக்கு தலா ரூ.25,000 மாத ஊதியத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவயதில் குற்றம் புரிந்து மனம்திருந்தியவர்களுக்கு நிரந்தர வருவாய் ஈட்டும் திறனை உருவாக்கித் தரும் விதமாக உயிர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அதிகமாக இளைஞர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நன்கு பயன்படுத்தி தங்களது எதிர்காலத்தை வளமாக்கி கொள்ள வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் திரு.சு.இலக்குவன், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குநர் திரு.சண்முகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி ஞானபிரபா உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply