விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், இலுப்பையூர் ஊராட்சியில்(01.07 2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ. 1.2 கோடி மதிப்பில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என். ஓ. சுகபுத்ரா , I A S,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2025- 2020 ஆண்டிற்கான சட்டப்மானியக் கோரிக்கையின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு எண்.5-இல் 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 01.07.2025 முதல் onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.மேலும் அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.06.2026 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, 15.05.2025 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.70 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.07.2025 முதல் www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணணப்பங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இது போன்று மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tnhillarealayoutreg.in என்ற இணையதளத்திற்கு பதிலாக 01.07.2025 முதல் 30.11.2025 வரை www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவே தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
கால்நடை வளர்ப்பின் மூலம் கால்நடைகளிலிருந்து கிடைக்கும் பால் மனிதர்களின் உணவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கால்நடைகளிலிருந்து பெறப்படும் பால், மாமிசம், உரோமம் மற்றும் பிற உபபொருட்களின் மூலம் நாட்டிற்கு பெரும் பொருளாதாரத்தை ஈட்டி கொடுப்பதால் நாட்டின் பொருளாதாரத்தில் கால்நடை வளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது. கோமாரி நோய் நம் நாட்டில் கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,45,700 பசு மற்றும் எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 02.07.2025 முதல் 22.07.2025 வரை 21 நாட்களுக்கு விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது.கோமாரி நோய் கால்நடை வளர்ப்போருக்கு அதிகப்படியான பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கோமாரி நோய் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. பொதுவாக இந்நோய் பசு மற்றும் எருமைகளை அதிகம் பாதிக்கிறது. இந்த நோய் தாக்குதலால் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைகிறது. எருதுகளின் வேலை செய்யும் திறன் குறைகிறது. கறவை மாடுகள் சினை பிடிப்பது தடைபடுகிறது.இளம் கன்றுகளில் இறப்பு நேரிடுகிறது. கோமாரி நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், மேற்கண்ட பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம். நோய் பரவ சாதகமான சூழ்நிலைகள் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம். நோய் பாதித்த இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாதிருத்தல், நோய் பாதித்த கால்நடைகளை பிரித்து பராமரிக்காமல் இருத்தல். கலப்பின கால்நடைகளில் இந்நோயின் பாதிப்பு அதிகம் காணப்படும் .நோய் பரவும் விதம் :-இந்நோய் பாதித்த மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கு நேரடியாக தொற்றும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து தீவனம், தீவனத்தட்டுகள், தண்ணீர் வைக்கோல், கால்நடைகளின் இதர உபகரணங்கள் மற்றும் மனிதர்கள் மூலமூம் பரவும் . இந்த நச்சுயிரி மாட்டுக்கொட்டகைகளில் சுமார் 15 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். இந்நோய் விரைவாக காற்றின் மூலமூம் பரவும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் இந்த நோய் அதிகமான கால்நடைகளுக்கு பரவுகின்றது.நோய் அறிகுறிகள் :காய்ச்சல் , தீவனம் உட்கொள்ளாத மந்த நிலையில் இருக்கும். அசை போடாது. அதிகமான நீர் தாகம் இருக்கும். பால் உற்பத்தி குறையும். வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் நூல் போல் ஒழுகிய வண்ணம் இருக்கும். வாயின் உட்பகுதி, நாக்கு மற்றும் கால் குளம்புகளின் நடுப்பகுதி, மடி ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தோன்றும் . பின்பு அவை உடைந்து ரணமாகிவிடும். அசை போடும் போது மாடு சப்பை கொட்டுவது போல் சப்தம் உண்டாகும். சினை மாடுகளில் கருசிதைவு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட மாடுகளில் மலட்டுத்தன்மையும், இரத்த சோகையும் ஏற்படும். பாதிக்கப்பட்ட பசுக்களில் கன்றுகளை பால் குடிக்க விடக்கூடாது. அவ்வாறு குடித்தால் கன்றுகள் உடனடியாக இறக்க நேரிடும்.தடுப்பூசி பணி :-சிறந்த பராமரிப்பும், தடுப்பூசி போடுவதும் இந்நோயினை தடுக்க உகந்த வழி. விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,45,700 பசு மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள 82 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 6 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 51 குழுக்கள் அமைக்கப்பட்டு, வருகின்ற 02.07.2025 முதல் 22.07.2025 வரை 21 நாட்களுக்கு தடுப்பூசிபணி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இத்தடுப்பூசிப்பணி நான்கு மாதத்திற்கு மேல் உள்ள கன்றுகளுக்கும் மற்றும் நிறை மாத சினை இல்லாத மாடுகளுக்கும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போடப்பட்டு வருகிறது.உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மக்களுக்கு இத்தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் வரும் பொழுது முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும், விவசாயிகளுக்கு தங்களது கிராமத்தில் எந்த நாட்களில் தடுப்பூசி பணி நடைபெறும் என்ற விவரம் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தால் அக்கிராமத்திற்கு தெரிவிக்கப்படும் அல்லது பொது மக்கள் தங்கள் பகுதி கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை கிளை நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். கோமாரி நோய் தடுப்பூசி முகாம் போடும் நாளில் விவசாயிகள் கால்நடை பராமரிப்புத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தவறாது தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் (27.06.2025) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 103 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 1045 மகளிர்களுக்கு ரூ.40.9 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.ஒரு காலத்தில் பெண்கள் ஒன்றாக சேர்ந்தால் பேசிக் கொண்டிருப்பார்கள் என்ற ஒரு தவறான கருத்து இருந்தது. தற்போது, இரண்டு பெண்கள் சேர்ந்து நான்கு கரங்களாக இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு மகளிர் சுய உதவிக்குழு.அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று வினவிய காலம் மாறி, இன்று பெண்கள் ஒன்றாக இணைந்து தங்களுக்கான மாற்றத்தோடு, சமுதாயமாற்றத்திற்கும் முக்கிய பங்காற்றுகின்றனர்.இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகளில் ஏறத்தாழ 45 சதவீத தொழிற்சாலைகளில் பெண்கள் மட்டுமே வேலை பார்க்கிறார்கள்.உழைப்பிற்கு உருவத்தை கொடுத்து உருவாக்குகின்ற பொழுது, அந்த உருவம் பெண்ணாக இருந்தது, அது சக்தி படைத்ததாகவும் இருக்கிறது. அந்த சக்தியை உங்கள் முன்னேற்றத்திற்கும் உங்களுடைய சமுதாய முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தான் கலைஞர் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கினார்கள்.நமது விருதுநகர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் ஏறத்தாழ பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களும், நகரப்பகுதிகளில் 3800 க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களும் என மொத்தம் 13,800 க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன.மதி அங்காடி மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலும், மின்னனு வணிகம் (E-Commerce) மூலமாகவும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருட்கள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.இது போன்று மகளிர் சுய உதவிக்குழுக்களின் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்கள் மூலம் நிதிகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.எனவே, பெண்கள் தங்களது சுய உழைப்பினால், தங்களது சுய பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்து, உயர்ந்த நிலைக்கு வரவேண்டும். உங்களுடைய பொருளாதாரத்தையும் சமூக மதிப்பையும் உயர்த்தி, உயர்ந்த நிலையை அடைவதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி வசுமதி, காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் திரு.செந்தில், மல்லாங்கிணறு பேரூராட்சித்தலைவர் திரு.துளசிதாஸ், காரியாபட்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் திரு.செல்வராஜ், திருமதி சரஸ்வதி பாண்டியராஜன், திரு.சங்கரேஷ்வரன், திரு.முஸ்தபா, திருமதி தீபா, முக்கிய பிரமுகர்கள் திரு.கண்ணன், திரு.செல்லம், திரு.ஜி.கண்ணன், திரு.எசலி ரமேஷ், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.விருதுநகர் மாவட்டம், விருதுநகர் நகராட்சி பாவாலி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் (27.6.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள், வழங்கப்படும் உணவின் தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் விருதுநகர் நகராட்சிப் பகுதிகளில் உள்ள 8 நகராட்சிப் பள்ளிகளில் 482 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.அதன்படி, விருதுநகர் நகராட்சி பாவாலி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள், வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்பதால் மாணவர்களுக்கு ஊட்டசத்து மிகுந்த காலை உணவுகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காலை உணவு என்பது குழந்தையின் மூளை மற்றும் போது ஆரோக்கியத்திற்கு ஊட்டமளிக்கிறது.எனவே, அரசு தெரிவித்துள்ள நடைமுறைகளை முறையாக பின்பற்றி, காலை உணவை ஊட்டசத்து மிக்கதாகவும் தரமானதாகவும், ருசியாகவும் வழங்குவதை தொடர்ச்சியாக உறுதி செய்ய வேண்டும் என இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.பின்னர், இங்கு கல்வி பயின்று வரும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், கற்பிக்கப்படும் முறை குறித்தும், கல்வி செயல்பாடுகள் குறித்தும், மாணவர்களின் வருகைப் பதிவு குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.மேலும் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் காலை உணவு சுவையாக, சத்தானதாகவும், தரமானதாகவும், குறித்த நேரத்தில் வழங்கபடுகிறதா எனவும் கேட்டறிந்து, இந்த திட்டத்தை மாணவர்கள் முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தினார்.மாணவர்களின் பெற்றோர்கள் இந்த திட்டத்தின் வாயிலாக தமது குழந்தைகள் தவறாமல் உணவு அருந்துவதாகவும், தவறாமல் பள்ளிக்கு சென்று வருவதாகவும், ஆர்வமாக கல்வி கற்பதாலும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பெற்றோர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (26.05. 2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு என். ஓ.சுகபுத்ரா , I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள் நோயாளிகள் பிரிவு உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை சார்ந்த திட்டங்கள், அதன் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவமனை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குந்தலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (26.6.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.மேலும், காலை உணவு மற்றும் மதிய உணவிற்கு பயன்படுத்தப்படும், காய்கறிகள், மளிகைப் பொருட்கள், முட்டைகளின் தரம் குறித்தும், மாணவர்களுக்கு தரமான உணவு மற்றும் முட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 90 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு கல்வி பயின்று வரும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், கற்பிக்கப்படும் முறை குறித்தும், கல்வி செய்பாடுகள் குறித்தும், மாணவர்களின் வருகைப் பதிவு குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் திரு.ஜே.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல் அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.ஜெகதீசன் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (26.06.2025) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், சர்வதேச போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,,IAS,அவர்கள்தலைமையில்நடைபெற்றது.போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் 1989 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.போதைப்பொருள் பயன்பாடு இல்லாத உலகத்தை அடைவதற்கான நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது, மேலும் இது உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது. சட்டவிரோத போதைப்பொருள் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பிரச்சனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.அதன்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், “நான் போதைப்பொருட்கள் பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிவேன். குழந்தைகளையும், நண்பர்களையும் போதைக்கு ஆளாகாமல் தடுத்து நிறுத்துவேன். மாவட்டத்தில் போதை பொருட்களை வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்” என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்ட கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.பின்னர், “நான் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன், போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்கு அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன்“ என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதக் கடத்தலுக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொ) மரு.பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி மீனாட்சி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.மதன்குமார், பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவில் வி.பி.எம்.எம். கல்லூரியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியில் (26.06 2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா , I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் கற்றல் திறன், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (26.06.2025) 2025-26-ம் நிதியாண்டிற்கான ரூ.32,019.52 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வெளியிட்டார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், கிராமப்புற வங்கிகள், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் என மொத்தம் 318 வங்கிக் கிளைகள் உள்ளன. இந்த வங்கிகளுக்கான 2025-26 நிதியாண்டிற்கான கடன் திட்ட இலக்கு நிர்ணயித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டது.இந்த கடன் திட்டங்களில் இலக்கானது அனைத்து வங்கிகளின் கடந்த நிதி ஆண்டின் நிதி நிலைமையின் அடிப்படையிலும், நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட இலக்கினையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலரின் அறிவுறுத்தல்படி இந்த ஆண்டு கடன் திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த நிதியாண்டின் கடன் இலக்காக ரூபாய் 32019.52 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னுரிமை கடன்களுக்கான இலக்காக ரூபாய் 20,475.91 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் இலக்கானது கடந்த நிதியாண்டின் இலக்கை விட ரூபாய் 2846.76 கோடி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில் விவசாய கடனுக்காக ரூபாய் 13290.90 கோடியும், தொழில் வளர்ச்சிக்காக ரூபாய் 6582.97 கோடியும், கல்விக் கடனாக ரூபாய் 38.11 கோடியும், வீட்டுக் கடனாக ரூபாய் 204.11 கோடியும், சமூக கட்டமைப்பு கடனாக ரூபாய் 1.40 கோடியும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கடனாக ரூபாய் 3.47 கோடியும், நலிவடைந்தோர் வளர்ச்சி கடனாக ரூபாய் 8556.01 கோடியும், பிற முன்னுரிமை கடனாக ரூபாய் 319.79 கோடியும் மற்றும் மற்ற கடன்களாக ரூபாய் 11543.62 கோடியும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மொத்த முன்னுரிமை கடன் திட்டத்தில் விவசாயத்திற்கு 64.91 சதவீதமும், தொழில் வளர்ச்சிக்கு 32.14 சதவீதம் மற்றும் இதர கடன்களுக்கு 2.95 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டமானது வட்டார அளவிலான வங்கி கிளைகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டு முறையாக கண்காணிக்கப்படும்.மேலும் இந்த கடன் இலக்கினை முறையாக செயல்படுத்திட மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட அளவிலான வங்கியாளர் கூட்டமும் மற்றும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை முன்னோடி வங்கி மேலாளரின் தலைமையில் வட்டார அளவிலான வங்கியாளர்கள் கூட்டமும் நடத்தப்பட்டு முறையாக கண்காணிக்கப்படும். மேலும் மாதம் ஒருமுறை கடன் வழங்கும் விழா மாவட்ட அளவில் நடத்தப்படும். சரியாக செயல்படாத வங்கிகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா, இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் திரு.தர்மராஜ், விருதுநகர் மாவட்ட நபார்டு வங்கியின் துணை பொது மேலாளர் திருமதி அனுசுயா எலிசபெத், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மதுரை மண்டல மேலாளர் திரு. புலுசு வெங்கடரமண ரவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ரா.பாண்டிச்செல்வன் மற்றும் அனைத்து வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.