ஈட்டி எறிதல் போட்டியில் தமிழக வீரர் மனோஜ் குமார் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் இந்திய தடகள சீரிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் 15-வது தொடர் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நேற்று நடைபெற்றது.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தமிழக வீரர் மனோஜ் குமார் அபாரமாக செயல்பட்டு தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். தனது 5-வது முயற்சியில் அதிகபட்சமாக 77.82 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்.
ஆர்மி அணியின் பிபின் 73.94 மீட்டர் தூரத்துடன் வெள்ளிப் பதக்கமும், உத்தரகாண்டைச் சேர்ந்த விகாஷ் 73.07 மீட்டர் தூரத்துடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஆண்களுக்கான குண்டு எறிதலில் ராஜஸ்தானின் ராம் சந்திர மாலி 15.91 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். தமிழக வீரர் பாலாஜி 15.83 மீட்டர் தூரத்துடன் வெள்ளிப் பதக்கமும், பஞ்சாப் வீரர் மால்கீட் சிங் 15.74 மீட்டர் தூரத்துடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த மிஜோ சாக்கோ குரியன் 46.89 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். தொடர்ந்து 200 மீட்டர் ஓட்டத்திலும் 21.41 வினாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் தருண் விகாஷ் 7.48 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே தூரத்தை பதிவு செய்த சரண் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
0
Leave a Reply