நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் அரசு மானியம் பெற்று பழக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை, விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், தாதம்பட்டியில் தோட்டக்கலைத்துறை மூலம் பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயீ யோஜனா (Pradhan Mantri Krishi Sinchayee Yojana – PMKSY) – நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் அரசு மானியம் பெற்று பழக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை, விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
நாட்டில் விவசாயத்திற்குத் தேவையான நீரை சிக்கனமாகவும், திறம்படவும் பயன்படுத்துவதையும், பாசன வசதிகளை மேம்படுத்துவதையும், நீர்ப்பாசனப் பரப்பை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயீ யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்களில் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் உள்ளிட்ட நுண்ணீர் பாசன முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை தோட்டக்கலை பயிர்களில் 17,252 விவசாயிகளுக்கு 14,501 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2025- 26 ஆம் ஆண்டில் சொட்டுநீர் பாசனம் 1013 விவசாயிகளுக்கு 1021 ஹெக்டர்கள் பரப்பளவில் ரூ.3.71 கோடி மானியத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 2026- 27 ஆம் ஆண்டில் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் உட்பட நுண்ணீர் பாசனம் அமைக்க 800 ஹெக்டேர்கள் இலக்கு நிர்ணயக்கப்பட்டு, ரூ.3.68 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.அதன்படி, இத்திட்டத்தின் கீழ் தாதம்பட்டியில் 0.75 ஹெக்டேர் பரப்பளவில் கொய்யா மரக்கன்றுகள், ஒண்டிப்புலி நாயக்கனூரில் 0.78 ஹெக்டேர் பரப்பளவில் வாழை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து, திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நுண்ணீர் பாசன உபகரணங்கள் தரமான முறையில் அமைக்கப்படுவதையும், அவை முறையாகச் செயல்படுவதையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்கவும், விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுண்ணீர் பாசன முறைகள் மூலம் குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதுடன், நீரின் பயன்பாட்டுத் திறனும் அதிகரிக்கிறது. குறிப்பாக, மழைப்பொழிவு குறைவாக உள்ள பகுதிகளில் கிடைக்கக்கூடிய நீர்வளத்தை சிக்கனமாகப் பயன்படுத்தி விவசாய உற்பத்தியைத் தொடர்ந்து மேற்கொள்ள நுண்ணீர் பாசன முறைகள் முக்கிய பங்காற்றுகின்றன. விவசாயிகளின் நிலத்தடி நீர் மற்றும் பாசன நீர் தேவைகளை கருத்தில் கொண்டு, அரசின் நுண்ணீர் பாசனத் திட்டங்களை தகுதியான விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ) அ.அம்சவேணி, தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.ஆறுமுகம் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
0
Leave a Reply