ஜவுளி ஏற்றுமதியினை அதிகரிப்பது குறித்து தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக் கூட்டம்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலககக் கூட்டரங்கில் ஜவுளி ஏற்றுமதியினை அதிகரிப்பது குறித்து தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் தலைமையில் (27.08.2026) நடைபெற்றது.இந்திய ஜவுளித்துறை அமைச்சகம் இந்தியாவின் ஜவுளி உற்பத்தி 37.5 பில்லியன் டாலரினை வருகின்ற 2030-ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்திடவும், விருதுநகரில் 195 மில்லியன் டாலர் மதிப்பீட்டிலான ஜவுளி உற்பத்தியினை 1000 மில்லியன் டாலராக மதிப்பீட்டிற்கு உயர்த்திடும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.
அதற்காக இந்திய அளவில் 200 மாவட்டங்களையும், அதில் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. அதில் விருதுநகர் மாவட்டமும் ஒன்று. இந்திய ஜவுளி அமைச்சகத்தின் செயல் திட்டத்தின் படி புத்தாக்கம், துல்லியம், முழுமையான மதிப்பீடுகளை மேம்பாடுத்துதலை மையமாகக் கொண்டு ஜவுளி உற்பத்தியில் உள்ள முன்னனி மாவட்டங்களில் உள்ள சாதகமான திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் முழுமையான ஜவுளி உற்பத்தியினை மேம்படுத்திட இயலும். 200 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துதல், தொழில் முனைவோரை ஊக்குவித்தல் போன்றவை ஜவுளித்துறையினை பலப்படுத்தும்.
மாவட்ட அளவிலான ஜவுளித்துறை வழிகாட்டுதலின் படி கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளி, காதி மற்றும் பட்டு வளர்ப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய செயல்திட்டத்தினை தயாரித்து ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் இதுவரை ஏற்றுமதி செய்யாத குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறைந்த பட்சம் 25 சதவித நிறுவனங்கள் ஏற்றுமதி சந்தைகளில் நேரடியாக நுழைய வழி வகுக்கும். இதன் மூலம் ஏற்றுமதியானது குறைந்தபட்சம் 3 மடங்கு உயர வாய்ப்பு ஏற்படும். மேலும், ஜவுளி உற்பத்தி உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், உற்பத்தியாளர்களுக்கான உடனடி பயன்பாட்டு வசதிகளை ஏற்படுத்தி தருதல், ஏற்றுமதி சந்தை இணைப்புகளை உருவாக்கி தருதல், திறமையான பணியாளர்களை அடையாளப்படுத்தி நிறுவனங்களுக்கு அனுப்புதல் போன்றவை காரணமாக ஜவுளி உற்பத்தியானது மேலும் அதிகரிக்கும். இதன் மூலம் இந்திய ஜவுளி அமைச்சகத்தின் இலக்கினை எளிதில் அடையளாம்.
ஜவுளி உற்பத்தியாளர்களுக்கான தடையில்லா மின்வசதி, உற்பத்தி மானியம், உற்பத்தி ஆலைகள் நிறுவுவதற்கு தேவையான இடவசதி உருவாக்கித் தருதல் போன்றவற்றால் தொழில் முனைவோர்கள் கூடுதல் ஊக்கத்துடன் இப்பணியில் ஈடுபடுவார்கள். இதன் காரணமாக பொதுமக்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். எனவே, அனைத்து தொழில் முனைவோர்களும் அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
கூட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறை துணை இயக்குநர் திருமதி சண்முகப்பிரியா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.கண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாலசுப்பிரமணியன், உதவி இயக்குநர்(ஜவுளி உற்பத்தி) திரு.சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply