ஆட்கொண்டநாதர் கோயில்.
மயில் வாகனத்தில் முருகப்பெருமானை பார்த்திருப்பீர்கள். ஆனால் மயில் மீது அமர்ந்த வள்ளி, தெய்வானையை பார்த்திருக்கிறீர்களா! சிவகங்கை மாவட்டம் இரணியூர் ஆட்கொண்டநாதர் கோயிலுக்கு வாருங்கள்.
நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, அசுரனான இரண்யனை வதம் செய்தார். அதனால் ஏற்பட்ட தோஷம் தீர சிவனை வழிபட்ட போது 'ஆட்கொண்டநாதர்' என்னும் பெயரில் இங்கு எழுந்தருளினார்.நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால் 'நரசிம்மேஸ்வரர்' என்றும் பெயருண்டு.இரணியனைக் கொன்ற பாவத்துக்கு விமோசனம் தந்த ஊர் என்பதால் இத்தலம் 'இரணியூர்' என பெயர் பெற்றது.
ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக இங்குள்ளார். கருவறை விமானத்தை சுவாமியாக கருதி வழிபடும் வழக்கம் இங்குள்ளது. முன்மண்டபத்தில் இருந்து சுவாமி, விமானத்தை ஒரே நேரத்தில் தரிசிக்கலாம். அறுபது, எண்பது வயதில் நடத்தும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகத்தை இங்கு நடத்துகின்றனர். மாசிமகத்தன்று சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது.
சிவபுரந்தேவியம்மன் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். நரசிம்மர் சிவனை வழிபட்ட போது உடனிருந்த அம்பிகை, இரண்ய வதத்தால் உக்கிரமாக இருந்த மகாவிஷ்ணுவின் தோற்றம் கண்டு கோபம் அடைந்தாள். அப்போது அவளிடம் இருந்து ஒன்பது சக்திகள் உருவாயின. அவர்கள் அம்மன் சன்னதி எதிரிலுள்ள துாண்களில் நவசக்திகள் என்ற பெயரில் உள்ளனர். இடது பக்கம் திரும்பிய நாய் வாகனத்துடன் பைரவர் இருக்கிறார்.இவருக்கு கார்த்திகை மாதம் 6 நாள் சம்பகசூர சஷ்டி நடக்கிறது.பிரகாரத்தில் வித்தக விநாயகரின் சன்னதி உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறக்க இவரை வழிபடுகின்றனர். சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி இருக்கிறார். குபேரனும், வாயு பகவானும் குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி உள்ளனர்.
0
Leave a Reply