பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில் சேர்ப்பது தொடர்பான மூன்றாம் கட்டமாக சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (13.06.2025) பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில் சேர்ப்பது தொடர்பான மூன்றாம் கட்டமாக சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழக அரசு, மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை அதிகமாக உயர்கல்விக்கு சேர்க்கைபெறும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் கல்லூரியில் சேர இயாத மாணவர்கள் மற்றும் முந்தைய கல்வி ஆண்டுகளில் பயின்று கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்கு வழிக்காட்டும் விதமாக சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.05.2025 மற்றும் 31.05.2025 ஆகிய தினங்களில் நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து, இன்று மூன்றாம் கட்டமாக சிறப்பு குறைதீரக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மாணவர்களிடமிருந்து, உயர்கல்வி பயில்வதற்கான சந்தேகங்கள் மற்றும் குறைகளையும் கேட்டறிந்து மாணவர்கள் உயர்கல்வி சேர்வதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
மேலும், நமது மாவட்டத்தில் விருதுநகர் கல்வி அறக்கட்டளை என்ற அறக்கட்டளையின் மூலம் எந்த உதவியும் கிடைக்க முடியாத வறுமை நிலையில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறோம். இது போல நிறைய தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், உதவி மையங்கள் மாணவர்களின் கல்விக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இயங்குகின்றனர்.நமது மாவட்டத்தில் மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட கல்வி உதவி மையம் செயல்பட்டு வருகிறது.எனவே, மாணவர்கள் அதற்கான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவியர்களுக்கு புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டங்கள் மூலம் மாதம்தோறும் உதவித்தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மேலும், இக்கூட்டத்தில் குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டுதலின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடரமுடியாமல் இருப்பதாக தெரிவித்த மாணவ, மாணவியர்களிடம் அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பாடப்பிரிவு துறைகளை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்தும், தீர்வுகளை எடுத்துக்கூறியும், உயர்கல்வி தொடர்வதற்கான உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.அரவிந்த், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply