25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Nov 21, 2025

4 ஆவது புத்தகக் கண்காட்சியில், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் பொது மக்களுக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 சிறப்பு  ஆலோசனை அரங்கம்.

விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் 4 ஆவது புத்தகக் கண்காட்சியில், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் பொது மக்களுக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 சிறப்பு  ஆலோசனை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.01.01.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கியும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெற்றும் வருகின்றனர். மேலும், பெறப்பட்ட படிவங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.                        இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும் பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்று வரும் விருதுநகர் 4 ஆவது புத்தகக் கண்காட்சியில் அரங்கம் எண் 28-ல் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 சிறப்பு  ஆலோசனை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த அரங்கத்தில், சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 மூலம் நடைபெற்று வரும் பணிகளின் முக்கிய தினங்கள், வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவது, 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரையோ அல்லது தங்களின் தந்தை/தாய்/தாத்தா/பாட்டி பெயர்களைக் கண்டறிவதற்கும் ஆலோசனைகள் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.எனவே, வாக்காளர்கள் இந்த சிறப்பு ஆலோசனை மையத்தில், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 தொடர்பான சந்தேகங்களை கேட்டறிந்து, பயன்பெறுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Nov 21, 2025

விருதுநகர் வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், மீசலூர் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து  (20.11.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மீசலூர் ஊராட்சியில் அமைந்துள்ள நியாய விலைக்கடையில் பொருட்களின் இருப்பு மற்றும் அவற்றின் தரம் குறித்தும், பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், பொருட்களின் வழங்கல் முறை குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, மீசலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால மற்றும் நடுத்தரக் கால பயிர்க்கடன் குறித்த விவரங்களையும்,  குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.பின், த.நா.சீனிவாசா அரசு மேல்நிலைப்பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றின் தரம் மற்றும் சுகாதாரத்தன்மை குறித்தும், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Nov 21, 2025

சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான சிறப்பு முகாம்களை 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

.1.1.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டுவாக்காளர்பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கியும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெற்றும் வருகின்றனர். இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 15,82,225வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடிமையங்களில் 19-11-2025 புதன் கிழமை மற்றும் 20.11.2025 வியாழக் கிழமை ஆகிய 2 தினங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டதன் பேரில் வாக்காளர்கள் பெருமளவில் இம்முகாம்களில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த படிவங்களைப் பூர்த்தி செய்து அளித்துள்ளனர். எனவே இந்த சிறப்பு முகாம்களை 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுவரை கணக்கெடுப்புப் படிவங்களைப் பெறாதவர்களும், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்புப் படிவங்களைப் பூர்த்தி செய்து அளிக்காதவர்களும் இச்சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 20, 2025

மாவட்டத்தில் 2,07,026 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி அலுவலகம், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (19.11.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 1.1.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கி வருகின்றனர்.இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 15,80,162 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 28,011 வாக்காளர்களுக்கான படிவங்களும், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 30,765 கணக்கெடுப்புப் படிவங்களும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 41,411 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களும், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 31,617 கணக்கெடுப்புப் படிவங்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 9,427 கணக்கெடுப்புப் படிவங்களும், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 31,718 கணக்கெடுப்புப் படிவங்களும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 34,077 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களும் என மாவட்டத்தில் மொத்தம் 2,07,026 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.அதன்படி, சிவகாசி மாநகராட்சி அலுவலகம், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்தும் அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

Nov 20, 2025

ஆலமரம் அமைப்பின் 248 வது வார விழாவில் 1000 மரக்கன்றுகள் மற்றும் 5000 பனைமர விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையில் அமைந்துள்ள நுண்உரம் தயாரிப்பு மையத்தில் விருதுநகர் நகராட்சி, விருதுநகர் லியோ கிளப் சரஸ்வதி அம்மாள் லையன்ஸ் மேல்நிலைப் பள்ளி பசுமை படை மாணவர்கள் இணைந்து நடத்தும் ஆலமரம் அமைப்பின் 248 வது வார விழாவில் 1000 மரக்கன்றுகள் மற்றும் 5000 பனைமர விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (19.11.2025) துவக்கி வைத்தார்.         விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்த அளவில் வனப்பகுதிகள் குறைந்த அளவில் இருப்பதாலும், இவ்வனப்பகுதிகளை அதிகரிக்கும் நோக்கத்துடனும் அரசு மட்டுமல்லாமல் அவற்றுடன் விவசாயிகள், மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள் என அனைவராலும் மரக்கன்றுகள் பல்வேறு கட்டங்களாக நடப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, ஆலமரம் அமைப்பின் 248 வது வார விழாவை முன்னிட்டு, 1000 மரக்கன்றுகள் மற்றும் 5000 பனைமர விதைகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மரங்கள் காற்று மாசுபாட்டை குறைக்கவும், மண் அரிப்பை கட்டுபடுத்தவும், மண் வளத்தினை மேம்படுத்தவும், நிலத்தடி நீரினை அதிகரிக்கவும் உதவி புரிகின்றன.   குறிப்பாக பனை மரத்திலிருந்து பெறப்படும்  உணவுப் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம் பல மருத்துவ குணநலன்களை கொண்டுள்ளது.  எனவே, நம்முடைய மாணவச் செல்வங்கள் பனை மரங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டு செயலாற்றினால் மாணவர்களின் எதிர்காலம் பயனுடையதாக மாறும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குநர் / மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி அ.அம்சவேணி, விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 20, 2025

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில், பூர்த்தி  செய்யப்பட்ட படிவங்கள் தேர்தல் ஆணைய வலைதளத்தில் பதிவு செய்யும் பணிகளை கண்காணிக்கவும், குறைவான முன்னேற்றம் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களைக் கண்டறிந்து பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையத்தினை என மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் பார்வையிட்டார்.1.1.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கியும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெற்றும் வருகின்றனர்.இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 15,79,181 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் 19-11-2025 புதன் கிழமை மற்றும் 20.11.2025 வியாழக் கிழமை ஆகிய 2 தினங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பூர்த்தி  செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெற்று அவற்றை தேர்தல் ஆணைய வலைதளத்தில் பதிவு செய்யும் பணிகள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இப்பணிகளைக் கண்காணிக்கவும், குறைவான முன்னேற்றம் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களைக் கண்டறிந்து அவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெறுவதைத் துரிதப்படுத்துவதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களின் குழுக்களை அமைத்து ஒரு கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதே போன்று ஒவ்வொரு வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்திலும் ஒரு கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர் கண்காணிப்பு மூலம், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நாளுக்குள்ளாக அனைத்துப் படிவங்களையும் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெற்று வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 20, 2025

விருதுநகர் 4 ஆவது கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி புத்தக கண்காட்சியில்,  "விருதுநகர் முதலீட்டாளர்கள் கூட்டம் - 2025 (Virudhunagar Investor Meet 2025)" 21.11.2025 அன்று நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்ட புத்தக  திருவிழாவின் ஒரு பகுதியாக புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழலை வலுப்படுத்தும் நோக்கத்தோடு, விருதுநகர் மாவட்டத்தின் முன்னணி தொழில்முனைவோர்கள் மூலம் புதிய தொழில்முனைவோருக்கு வழிகாட்டி முதலீடு செய்யும் சூழலை மேம்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில்  21.11.2025 வெள்ளிக்கிழமை  மாலை 4 மணிமுதல் 6 மணிவரை கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி புத்தக கண்காட்சி கலையரங்கில் "விருதுநகர் முதலீட்டாளர்கள் கூட்டம் 2025(Virudhunagar Investor Meet 2025)" நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்டத்தின் தொழில்வளர்ச்சிக்கான கலந்துரையாடல், விருதுநகரின் Startup  நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல், புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வது எப்படி, அதன் மூலம் கிடைக்கப்பெறும் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி, இளம் தொழில்முனைவோர்க்கு வழிகாட்டுதல் என விருதுநகரின் தொழில்முனைவு சூழலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது பற்றி கலந்துரையாடப்படும்.இக்கூட்டத்தில் சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் உள்ள முதலீடு சார்ந்த முன்னணி முதலீட்டாளர்களும் கலந்து கொண்டு, அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்நிகழ்விற்கு அனைத்து தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்முனைவோர் சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 20, 2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கியமேம்பாட்டுச் சங்கம் மூலம் 2024-2025-ஆம் ஆண்டில் சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகையினை பெறதகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் .

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் தொடர்பான திறனை மேம்படுத்தி உயர்த்தும் நோக்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் தோற்றவிக்கப்பட்டு அச்சங்கம் மூலம் 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தெரிவு செய்து அவர்களுக்கு தலா ரூ.1,00,000/- ஆக நிதி உதவியினை உயர்த்தி வழங்கிட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. 2024-2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகையினை பெற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதற்கான விண்ணப்பங்களை தொடர்புடைய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திலும் வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் tn.gov.in  என்ற இணைய தளத்திலும் (website) (or)  https://www.tn.gov.in/form view.php?dep  id=MQ= பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது படைப்பினை இரு நகல்களிலும் டிஜிட்டல் (Digital) முறையிலும், உரிய படிவத்தில் அனுப்ப வேண்டும், இதற்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.11.2025-அன்றாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 19, 2025

நாஷா முக்த் பாரத், குஷால் பாரத் திட்டத்தின் கீழ் நாஷா முக்த் பாரத் அபியானின் 5 ஆண்டு கொண்டாட்டம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான உறுதிமொழி.

 பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில், நாஷா முக்த் பாரத், குஷால் பாரத் திட்டத்தின் கீழ் நாஷா முக்த் பாரத் அபியானின் 5 ஆண்டு கொண்டாட்டம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வில் விருதுநகர் மாவட்டம், சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் “நஷா முக்த் பாரத் அபியான்“(NMBA) திட்டத்தின் 5வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தேசிய நிகழ்வாக “போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கான பிரச்சாரம்” என்ற தலைப்பில் அக்டோபர் 2025-ம் மாதத்தில் நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.குறைந்தபட்சம் ஒரு கோடி மக்கள் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 10% பேர் இப்பொருள் குறித்து உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் என்.எம்.பி.ஏ. திட்டத்தினை சிறப்பாக கொண்டாடும் வகையில் 27.10.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதைப்பொருள் பயன்பாடுகளினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு பேரணியும், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.அதனை தொடர்ந்து, 18.11.2025 இன்று விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் “போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கான பிரச்சாரம்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இளைஞர்கள் தேசத்தின் சக்தியாகவும், சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம் என்பதால் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்கவேண்டும். மாணவர்களாகிய நீங்கள் உங்களின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் கல்வியில் கவனம் செலுத்தி உங்களுக்கும், உங்களின் பெற்றோர், சமூகம் மற்றும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கவேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிந்து போதைப் பழக்கத்திற்கு ஆளாக்கூடாது. குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த நமது பங்களிப்பை முழுமையாக அளிக்கவேண்டும். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை வேரறுக்க அரசுக்கு துணை நிற்கவேண்டும். நமது மாவட்டத்தை போதைப்பொருட்கள் இல்லாத ஒரு பாதுகாப்பான மாவட்டமாக மாற்ற நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி மீனாட்சி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 19, 2025

மல்லாகிணறு பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.

1.1.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கி வருகின்றனர். இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,10,890 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களும், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,40,624 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,27,628 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களும்,சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 2,41,193 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 2,20,231 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களும், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 2,16,869 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 2,15,219 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களும் என மாவட்டத்தில் மொத்தம் 15,72,654 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.இந்த சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் தொடர்ச்சியாக கள ஆய்வு மேற்கொண்டும், ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.அதன்படி, மல்லாகிணறு பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்தும் அரசு அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

1 2 ... 60 61 62 63 64 65 66 ... 140 141

AD's



More News