விருதுநகர் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேராத மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான முகாம்கள் நடத்துவதற்கு தமிழக அரசு ‘நான் முதல்வன், உயர்வுக்கு படி” என்ற திட்டத்தினை உருவாக்கியுள்ளது.இத்திட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.முதற்கட்டமாக அருப்புக்கோட்டை சரகத்திற்கு காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் 25.08.2025 அன்றும், சிவகாசி சரகத்திற்கு காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 29.08.2025 அன்றும், சாத்தூர் சரகத்திற்கு எஸ்.ஆர்.என்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 02.09.2025 அன்றும் நடைபெறுகிறது.இம்முகாம்களில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேர இயலாத மாணவர்கள், தோல்வியுற்ற மாணவ/ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். 2025-26 கல்வியாண்டு மட்டுமல்லாது அதற்கு முந்தைய கல்வியாண்டுகளிலும் பயின்று கல்லூரியில் சேராத மாணவர்களும் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். பல்வேறு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், கலந்து கொண்டு மாணவர்களுக்கு உடனடி சேர்க்கை வழங்கவுள்ளனர்.இதன் மூலம் மாணவர்களுக்கு உடனடியாக கல்லூரியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.எனவே உயர்கல்வியில் சேர்வதற்கான சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து முகாமில் கலந்துகொண்டு தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஸ்ரீ எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில், (11.09.2023) தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் பாவலர் அறிவுமதி அவர்கள் காலந்தோறும் தமிழின் மாண்புகளையயும் மாற்றங்களையும் மாற்றத்தின் சிறப்புகளையும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் "காலந்தோறும் தமிழ்" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் உயர்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து "மாபெரும் தமிழ்க்கனவு" என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு, 2022- 2023 மற்றும் 2023 - 2024 கல்வியாண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 2000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2 இலட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 200 இடங்கில் சிறப்பாக நடத்தப்பட்டன.இதன் 100-வது நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை, சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது. எனவே, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, அடுத்த கட்ட நிகழ்ச்சியானது தற்போது தொடங்கியுள்ளது. நமது தமிழ் மரபின் வளமையும் பண்பாட்டின் செழுமையும், சமூகச் சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு இந்தப் பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலகம் மூலம் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை, கல்லூரி மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் உயர்கல்;வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் கல்விக்கடன், வங்கிக்கடன், மாவட்ட தொழில் மையம் சார்பில் மத்திய மாநில அரசுகளின் தொழில் முனைவோர் திட்டங்கள், மான்யத்துடன் கூடிய கடன்உதவிகள், தாட்கோ மூலம் தொழில்முனைவோர்களுக்கான அரசுத் திட்டங்கள் மற்றும் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வாய்ப்புகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழு பொருட்களின் கண்;காட்சி மற்றும் விற்பனை உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.மேலும், கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களது சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில் தமிழ் பெருமிதம் குறித்து சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பெருமித செல்வன் மற்றும் பெருமித செல்வி விருதுகள் வழங்கப்பட்டன. சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் பின் சிறந்த கேள்விகள் எழுப்பிய கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேள்வியின் நாயகன் மற்றும் கேள்வியின் நாயகி விருதுகளும் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், கல்லூரி முதல்வர் முனைவர் கிருஷ்ணவேணி, பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் அரசு சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (20.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சமூக நலத் துறையின் மூலம், வன்முறையிலிருந்து பெண்களை காப்பதற்கான செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை (One Stop Centre) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சின்ன மருளுத்து கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும், மருளுத்து கிராமத்தில், இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித்தொகை வழங்கும் “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் பயனடைந்து வரும் மாணவர்கள் மற்றும் குழந்தையின் பாதுகாவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சந்தித்து கலந்துரையாடி, இத்திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், நடுவப்பட்டி ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் தமிழ்நாடு உரிமைகள் என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம் வீடு தோறும் சென்று மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், நடுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும், மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.மேலும், நடுவப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்களின் பெயர்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மன்னார் கோட்டை கிராமத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வனத்துறையின் சார்பாக காட்டுப் பன்றிகளை பிடிப்பதற்காக வனத்துறை மூலம் பொருத்தப்பட்ட கூண்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், படந்தால் ஊராட்சியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களின் தரம் குறிந்து பணியாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பட்டம்புதூர் கிராமத்தில் (20.08.2025) உணவு பாதுகாப்புத் துறையும், நியூ கான்செப்ட் இன்பர்மேஷன் பிரைவேட் லிட் என்ற தன்னார்வ நிறுவனமும் இணைந்து நடத்திய, “செறிவூட்டப்பட்ட மூல உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு சமைத்தலை பற்றிய செயல் விளக்க முகாமினை“ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.செறிவூட்டப்பட்ட மூல உணவுப் பொருட்களிருந்து உணவு சமைப்பதால், செறிவூட்டப்பட்ட மூல உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்தில் குறைபாடு ஏதும் ஏற்படாது. செறிவூட்டப்பட்ட அரிசியை கழுவும் போது மிதக்கும் வெள்ளை நிற அரிசியை நீக்கிவிட வேண்டாம். அதையும் சேர்த்தே சமைக்க வேண்டும். அந்த வெள்ளை நிற அரிசி தான் வைட்டமின்கள் நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் ஆகும்.மேலும், தமிழ்நாடு அரசு வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட பாமோலின் எண்ணெயும், இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட உப்பினையும் நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.அதன்படி செறிவூட்டப்பட்ட அரிசியை பயன்படுத்தி சமையல் செய்வது குறித்த செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் பட்டம்புதூர் மற்றும் ஆர்.ஆர்.நகர் பகுதிகளில் இந்த நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தொடர்ந்து, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் எட்டூர் மற்றும் அப்பநாயக்கன்பட்டியில் 21.08.2025 அன்றும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தாயில்பட்டி மற்றும் ஆலங்குளத்தில் 22.08.2025 அன்றும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் தளவாய்புரம் மற்றும் மம்சாபுரம் பகுதியில் 23.08.2025 அன்றும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் இராமகிருஷ்ணாபுரம் மற்றும் கிருஷ்ணன் கோயில் பகுதிகளில் 25.08.2025 அன்றும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் மகாராஜபுரம் மற்றும் தம்பிபட்டி பகுதிகளில் 26.08.2025 அன்றும்,சிவகாசி ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி மற்றும் எரிச்சநத்தம் பகுதிகளில் 28.08.2025 அன்றும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாலவநத்தம் மற்றும் பாளையம்பட்டி பகுதிகளில் 29.08.2025 அன்றும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் வக்கனாங்குண்டு மற்றும் கல்குறிச்சி பகுதிகளில் 30.08.2025 அன்றும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் கல்லூரணியில் 01.09.2025 அன்றும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் வீரசோழன் பகுதியில் 01.09.2025 அன்றும் நடைபெற உள்ளது. எனவே அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.மேலும், செறிவூட்டப்பட்ட உணவுப் பொருள் குறித்த விளக்கக் கையேடு, சுவரொட்டி மற்றும் துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.இந்நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.ச.மாரியப்பன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திரு.தர்மர், திரு.ஜோதிபாஸ் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்கள், நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள், பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள பால்கோவா உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில், தமிழ்நாடு அரசு சின்னத்தையும், கூட்டுறவு சின்னத்தையும் பெயர் பலகைகளிலும், லேபிள்களிலும் பயன்படுத்துவதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவிற்கு வந்த புகார் அடிப்படையில், 19.08.2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள பால்கோவா உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையின் விருதுநகர் மாவட்ட நியமன அலுவலர் மரு.ச.மாரியப்பன் அவர்கள் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர், காவல் துறை அலுவலர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் பால்வளத் துறை அலுவலர் அடங்கிய கூட்டுக்குழு ஆய்வு நடத்தினார்கள். அதில், 12 தனியார் விற்பனை நிலையங்களில் ‘விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்”, ‘பால் பண்ணை”, ‘கூட்டுறவு பால் பண்ணை” போன்ற பெயர்களையும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சின்னத்தையும் (Emblem) பரவலாகப் பயன்படுத்தியதும்,இரண்டு கடைகளில் தமிழ்நாடு அரசு சின்னமும், மூன்று கடைகளில் ‘தமிழ்நாடு அரசு” என்ற பெயரும் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டு, அதனை அகற்ற அக்கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், தயாரிப்பு தேதி அச்சிடாமல் லேபிள் விதிமுறைகளை மீறியதற்காக12¾ கிலோ பால் அல்வாவும், 6 ¼ கிலோ பால் பேடாவும், சாட்சியத்திற்காக 2 ½ கிலோ பால்கோவாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி, உணவு வணிகர்களுக்குச் சம்பந்தம் இல்லாத வேறொரு நிறுவனத்தின் பெயரையும், சின்னத்தையும், ‘பெயர் பலகையின்” மூலம் விளம்பரப்படுத்துவதும், ‘லேபிளில்” குறிப்பிடுவதும், நுகர்வோர்களைத் தவறாக வழிநடத்துவதாகும் என்பதுடன், அது குற்றச்செயலாகக் கருதி, மேற்கூறிய சட்டத்தின் பிரிவுகள் 52, 53 மற்றும் 58-ன் கீழ் வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்று எச்சரிக்கப்படுகின்றது.மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெறும் போது, தனிநபர் உரிமை என்று உரிமம் பெற்றுவிட்டு, ‘கூட்டுறவு” என்று பெயர் பலகையிலும், லேபிளிலும் தெரிவிப்பது என்பது, வணிகர் பொய்யான தகவல் வழங்கி உரிமம் பெற்றுள்ளார் என்று பொருளாகி, அது குற்றமாகக் கருதப்பட்டு, மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 61-ன் கீழ் தவறிழைப்போருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது. எனவே, எந்தப் பெயரில் உணவு பாதுகாப்பு உரிமம் பெறப்பட்டுள்ளதோ, அந்தப் பெயர், அல்லது எந்த ப்ராண்ட் பெயரில் டிரேட்மார்க் சான்று பெறப்பட்டுள்ளதோ, அந்தப் பெயரை மட்டும் நிறுவனத்தின் பெயராகவோ அல்லது ப்ராண்ட் பெயராகவோ பெயர் பலகையிலும், லேபிளிலும் இருக்கலாமேயொழிய, வணிகர்களுக்குச் சம்பந்தமில்லாத வகையில் ‘கூட்டுறவு”, ‘தமிழ்நாடு அரசு”, ‘விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்”, ‘பால் பண்ணை” போன்ற பெயர்களைக் கடைகளின் பெயர் பலகைகளிலோ அல்லது பால்கோவா பாக்கெட்டுகளின் லேபிளிலோ பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்படுகின்றது.மேலும், அவ்வாறு பெயர்கள் மற்றும் சின்னம் அச்சிட்ட பெயர் பலகைகளை சம்பந்தப்பட்ட உணவு வணிகர்கள் உடனடியாக அகற்றிட வேண்டும் என்றும், லேபிளில் 14 நாட்களுக்குள் திருத்தம் செய்திட வேண்டும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.இதுகுறித்து, விதிகளை மீறியுள்ள வணிகர்களுக்கு எதிராக உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் சட்ட விதிகளுக்குட்பட்டு உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், தோணுகால் அசேபா வளாக திருமண மண்டபத்தில் (19.08.2025) வேளாண்மைத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.மேலும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.9.02 இலட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய பவர் டில்லர், பவர் வீடர், சுழல் கலப்பை உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. வேளாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தனி நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முக்கியத் திட்டமான மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.உயிர்ம வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி என்பது வேளாண்மையினருக்கு முக்கியமான நிகழ்வு ஆகும்;. இன்றைய மனிதன் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான தேவை இயற்கை உணவாகும். இயற்கையோடு இணைந்து நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்வதே உயிர்ம வேளாண்மையின் நோக்கமாகும்.கடந்த 50 ஆண்டுகளில் மண்ணின் சத்து அளவு 30-40 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிலத்தடி நீரும் இரசாயனங்களால் பெரும் அளவில் பாதிப்பு அடைந்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்துள்ளது. பயிர் சாகுபடிக்கான இடு பொருட்கள் செலவு அதிகரித்துள்ளதால் விவசாயிகளின் வருமானம் குறைந்துள்ளது. நமது அன்றாட உணவில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் கலந்துள்ளதால் அனைத்து விதமான நோய்களும் அதிகரித்துள்ளன.எனவே, விவசாயிகள் இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களை பின்பற்றி நிலங்களில் முழுமையாக இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி மண்வளத்தை மேம்படுத்த வேண்டும். மனிதன் மட்டுமின்றி கால்நடைகளின் ஆரோக்கியத்திற்கும் நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும். இயற்கை விவசாயம் நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாது விவசாயிகளின் பொருளாதார விடுதலைக்கும் அவசியமானதாகும்.எனவே, விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கண்காட்சியை பார்வையிட்டு கருத்தரங்கில் வழங்கப்படும் தொழில்நுட்பங்களை பின்பற்றி நமது மாவட்டத்தை இயற்கை வேளாண் சாகுபடியில் மாநில அளவில் முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும். அரசின் முயற்சியோடு நாம் அனைவரும் ஒன்றிணைந்து உயிர்ம வேளாண் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும். விவசாயம் என்பது ஒரு தொழில் அல்ல. இயற்கை விவசாயம் நமது கடமை என்பதை உணர்ந்து மண்ணையும், நீரையும் காப்பாற்றி நமது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யவேண்டிய முக்கிய கடமையாகும்.எனவே, அனைத்து விவசாயிகள் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை குறித்த தொழில் நுட்பங்கள் குறித்தும், புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், வேளாண் மற்றும் வேளாண் துறை சார்ந்த துறைகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் பல்வேறு கருத்துக்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கோவிலாங்குளம் மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் உயிர்ம வேளாண்மையின் முக்கியத்துவம் மற்றும் அதன் வாய்ப்புகள் என்ற தலைப்பிலும், திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஜோதிமணி அவர்கள் உயிர்ம வேளாண்மையில் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பிலும், இராஜபாளையம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பழனிச்சாமி அவர்கள் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பிலும், கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையம் சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் முனைவர் கண்ணன் அவர்கள் உயிர்ம வேளாண்மை இடுபொருட்கள் உற்பத்தி என்ற தலைப்பிலும்,கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஜட்டா கவிதா அவர்கள் உயிர்ம வேளாண்மையில் பூச்சி நோய் மேலாண்மை என்ற தலைப்பிலும், விருதுநகர் வேளாண்மை துணை இயக்குநர்(மாநிலத் திட்டம்) திருமதி முத்துலட்சுமி அவர்கள் வேளாண்மை துறையில் அங்கக வேளாண்மை குறித்த திட்டங்கள் என்ற தலைப்பிலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்)/துணை இயக்குனர் திருமதி அம்சவேணி அவர்கள் மண் மற்றும் நீர் பாதுகாப்பில் பாரம்பரிய தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பிலும்,விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் திருமதி வளர்மதி அவர்கள் உயிர்ம வேளாண்மையில் விதைகளின் பங்கு என்ற தலைப்பிலும், விருதுநகர் வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைத்துறை துணை இயக்குநர் திருமதி செல்வி அவர்கள் உயிர்ம வேளாண்மை விலை பொருட்களின் விற்பனை வாய்ப்புகள் என்ற தலைப்பிலும், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபாவாசுகி அவர்கள் தோட்டக்கலையில் அங்கக வேளாண்மை என்ற தலைப்பிலும், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திருமதி இந்திரா அவர்கள் வேளாண்மையை எளிதாக்கும் இயந்திரங்கள் மற்றும் அரசு மானியத் திட்டங்கள் என்ற தலைப்பிலும், உதவி இயக்குநர்(விதை சான்று மற்றும் அங்ககச் சான்று) திருமதி கோகிலா அவர்கள் உயிர்மச் சான்றோளிப்பு மற்றும் பங்கேற்பாளர் உறுதியளிப்பு திட்டம் என்ற தலைப்பிலும், விருதுநகர் விற்பனை குழு செயலாளர் திரு.வேலுசாமி அவர்கள் உயிர்ம வேளாண்மையில் வணிகம் மேற்கொள்ளுதல் என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினார்கள்.மேலும், முன்னோடி விவசாயிகள் உயிர்ம வேளாண்மையில் தங்களின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Certification in videography and video Editing) பயிற்சி வழங்கப்படவுள்ளது .தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறுதிறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகதற் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Certification in videography and video Editing) பயிற்சி வழங்கப்படவுள்ளது.இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்குள் இருக்கவேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சியினை பெறதாட்கோ இணையதளமான(www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,.அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (18.08.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.காளிமுத்து, மாவட்ட நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.அமர்நாத், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மதுரை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள திட்டப்பகுதிகளில் உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் (சுயநிதி திட்டம் (ம) வணிக மனைகள் நீங்கலாக) ஒதுக்கீடு பெற்று 31.03.2015 ற்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்றும் தவணைத் தொகை செலுத்தாத ஒதுக்கீடுதாரர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மூலம் அரசாணை பிறப்பிக்கப்பட்டு அரசாணை எண். 116, நாள் 04.08.2025 ன்படி வட்டி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, தவணைத் தொகை சரிவர செலுத்தாத ஒதுக்கீடுதாரர்கள் இந்த சலுகையினை பயன்படுத்தி வரும் 31.03.2026 ற்குள் வட்டி தள்ளுபடி போக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை ஒரே தவணையாக செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வட்டி தள்ளுபடி சலுகையின் சிறப்பம்சங்கள் :-மாதத் தவணைக்கான அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி முழுமையாக தள்ளுபடி, நிலத்திற்கான இறுதி விலை வித்தியாச தொகையில், ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாத வட்டி தள்ளுபடி. கடந்த 31.03.2015 ற்கு முன்னர் தவணை காலம் முடிவுற்ற ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகையினை அறிந்து ஒரே தவணையில் தொகையினை செலுத்தி மேற்கண்ட வட்டி சலுகை திட்டத்தின் மூலம் பயன் பெற்று கிரையபத்திரம் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் (ம) நிர்வாக அலுவலர் திரு.ஆர். கார்த்திகேயன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (16.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், முடுக்கன் குளம் கிராமத்தில் ரூ.32 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் உபமின் நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுத்தினார்.அதனை தொடர்ந்து, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், ஆவியூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் மின் நிலையத்தினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மின் உபகரணங்களை முறையாக பராமரிப்பு செய்து, தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய அலுவலர்களை அறிவுறுத்தினார்.பின்னர், கடம்பங்குளம் கிராமத்தில் சூரிய ஒளி தகடுகள் அமைக்கப்பட்டுள்ளதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மின்சார உற்பத்தி பயன்பாடு குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.மேலும், காரியாபட்டி வட்டத்தில் வசிக்கும் பயனாளி ஒருவரின் இல்லத்தில் அரசின் மானியத்தின் மேற்கூரையில் சூரிய ஒளி தகடுகள் அமைக்கப்பட்டு, மின்சார உற்பத்தி செய்து பயன்படுத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளியிடம் அதன் பயன்கள் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.இந்த ஆய்வின் போது, ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் என அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் சென்றடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வில், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.