25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 21, 2025

தனியார் பால்கோவா உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு அரசு சின்னத்தையும், கூட்டுறவு சின்னத்தையும் பெயர் பலகைகள் மற்றும் லேபில்களில் பயன்படுத்துவோர் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி, வழக்கு பதிவு செய்யப்படும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள பால்கோவா உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில், தமிழ்நாடு அரசு சின்னத்தையும், கூட்டுறவு சின்னத்தையும் பெயர் பலகைகளிலும், லேபிள்களிலும் பயன்படுத்துவதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவிற்கு வந்த புகார் அடிப்படையில், 19.08.2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள பால்கோவா உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில்  உணவு பாதுகாப்புத் துறையின் விருதுநகர் மாவட்ட நியமன அலுவலர் மரு.ச.மாரியப்பன் அவர்கள் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர், காவல் துறை அலுவலர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் பால்வளத் துறை அலுவலர் அடங்கிய கூட்டுக்குழு ஆய்வு நடத்தினார்கள்.       அதில், 12 தனியார் விற்பனை நிலையங்களில் ‘விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்”, ‘பால் பண்ணை”, ‘கூட்டுறவு பால் பண்ணை” போன்ற பெயர்களையும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சின்னத்தையும் (Emblem) பரவலாகப் பயன்படுத்தியதும்,இரண்டு கடைகளில் தமிழ்நாடு அரசு சின்னமும், மூன்று கடைகளில் ‘தமிழ்நாடு அரசு” என்ற பெயரும் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டு, அதனை அகற்ற அக்கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், தயாரிப்பு தேதி அச்சிடாமல் லேபிள் விதிமுறைகளை மீறியதற்காக12¾ கிலோ பால் அல்வாவும், 6 ¼ கிலோ பால் பேடாவும், சாட்சியத்திற்காக 2 ½ கிலோ பால்கோவாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.     உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி, உணவு வணிகர்களுக்குச் சம்பந்தம் இல்லாத வேறொரு நிறுவனத்தின் பெயரையும், சின்னத்தையும்,  ‘பெயர் பலகையின்” மூலம் விளம்பரப்படுத்துவதும், ‘லேபிளில்” குறிப்பிடுவதும், நுகர்வோர்களைத் தவறாக வழிநடத்துவதாகும் என்பதுடன், அது குற்றச்செயலாகக் கருதி, மேற்கூறிய சட்டத்தின் பிரிவுகள் 52, 53 மற்றும் 58-ன் கீழ் வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்று எச்சரிக்கப்படுகின்றது.மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெறும் போது, தனிநபர் உரிமை என்று உரிமம் பெற்றுவிட்டு, ‘கூட்டுறவு” என்று பெயர் பலகையிலும், லேபிளிலும் தெரிவிப்பது என்பது, வணிகர் பொய்யான தகவல் வழங்கி உரிமம் பெற்றுள்ளார் என்று பொருளாகி, அது குற்றமாகக் கருதப்பட்டு, மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 61-ன் கீழ் தவறிழைப்போருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது.  எனவே, எந்தப் பெயரில் உணவு பாதுகாப்பு உரிமம் பெறப்பட்டுள்ளதோ, அந்தப் பெயர், அல்லது எந்த ப்ராண்ட் பெயரில் டிரேட்மார்க் சான்று பெறப்பட்டுள்ளதோ, அந்தப் பெயரை மட்டும் நிறுவனத்தின் பெயராகவோ அல்லது ப்ராண்ட் பெயராகவோ பெயர் பலகையிலும், லேபிளிலும் இருக்கலாமேயொழிய, வணிகர்களுக்குச் சம்பந்தமில்லாத வகையில் ‘கூட்டுறவு”, ‘தமிழ்நாடு அரசு”, ‘விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்”, ‘பால் பண்ணை” போன்ற பெயர்களைக் கடைகளின் பெயர் பலகைகளிலோ அல்லது பால்கோவா பாக்கெட்டுகளின் லேபிளிலோ பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்படுகின்றது.மேலும், அவ்வாறு பெயர்கள் மற்றும் சின்னம் அச்சிட்ட பெயர் பலகைகளை சம்பந்தப்பட்ட உணவு வணிகர்கள் உடனடியாக அகற்றிட வேண்டும் என்றும், லேபிளில் 14 நாட்களுக்குள் திருத்தம் செய்திட வேண்டும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.இதுகுறித்து, விதிகளை மீறியுள்ள வணிகர்களுக்கு எதிராக உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் சட்ட விதிகளுக்குட்பட்டு உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 20, 2025

விருதுநகர் மாவட்டம் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், தோணுகால் அசேபா வளாக திருமண மண்டபத்தில் (19.08.2025) வேளாண்மைத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.மேலும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.9.02 இலட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய பவர் டில்லர், பவர் வீடர், சுழல் கலப்பை உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. வேளாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தனி நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முக்கியத் திட்டமான மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.உயிர்ம வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி என்பது வேளாண்மையினருக்கு முக்கியமான நிகழ்வு ஆகும்;. இன்றைய மனிதன் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான தேவை இயற்கை உணவாகும். இயற்கையோடு இணைந்து நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்வதே உயிர்ம வேளாண்மையின் நோக்கமாகும்.கடந்த 50 ஆண்டுகளில் மண்ணின் சத்து அளவு 30-40 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிலத்தடி நீரும் இரசாயனங்களால் பெரும் அளவில் பாதிப்பு அடைந்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்துள்ளது. பயிர் சாகுபடிக்கான இடு பொருட்கள் செலவு அதிகரித்துள்ளதால் விவசாயிகளின் வருமானம் குறைந்துள்ளது.  நமது அன்றாட உணவில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் கலந்துள்ளதால் அனைத்து விதமான நோய்களும் அதிகரித்துள்ளன.எனவே, விவசாயிகள் இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களை பின்பற்றி நிலங்களில் முழுமையாக இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி மண்வளத்தை மேம்படுத்த வேண்டும். மனிதன் மட்டுமின்றி கால்நடைகளின் ஆரோக்கியத்திற்கும் நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும்.  இயற்கை விவசாயம் நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாது விவசாயிகளின் பொருளாதார விடுதலைக்கும் அவசியமானதாகும்.எனவே, விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து  கண்காட்சியை பார்வையிட்டு கருத்தரங்கில் வழங்கப்படும் தொழில்நுட்பங்களை பின்பற்றி நமது மாவட்டத்தை இயற்கை வேளாண் சாகுபடியில் மாநில அளவில் முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும்.  அரசின் முயற்சியோடு நாம் அனைவரும் ஒன்றிணைந்து உயிர்ம வேளாண் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும்.  விவசாயம் என்பது ஒரு தொழில் அல்ல. இயற்கை விவசாயம் நமது கடமை என்பதை உணர்ந்து மண்ணையும், நீரையும் காப்பாற்றி நமது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யவேண்டிய முக்கிய கடமையாகும்.எனவே, அனைத்து விவசாயிகள் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை குறித்த தொழில் நுட்பங்கள் குறித்தும், புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், வேளாண் மற்றும் வேளாண் துறை சார்ந்த துறைகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் பல்வேறு கருத்துக்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு  காட்சிப்படுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கோவிலாங்குளம் மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் உயிர்ம வேளாண்மையின் முக்கியத்துவம் மற்றும் அதன் வாய்ப்புகள் என்ற தலைப்பிலும், திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஜோதிமணி அவர்கள் உயிர்ம வேளாண்மையில் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பிலும், இராஜபாளையம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பழனிச்சாமி அவர்கள் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பிலும், கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையம் சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் முனைவர் கண்ணன் அவர்கள் உயிர்ம வேளாண்மை இடுபொருட்கள் உற்பத்தி என்ற தலைப்பிலும்,கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஜட்டா கவிதா அவர்கள் உயிர்ம வேளாண்மையில் பூச்சி நோய் மேலாண்மை என்ற தலைப்பிலும், விருதுநகர் வேளாண்மை துணை இயக்குநர்(மாநிலத் திட்டம்) திருமதி முத்துலட்சுமி அவர்கள் வேளாண்மை துறையில் அங்கக வேளாண்மை குறித்த திட்டங்கள் என்ற தலைப்பிலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்)/துணை இயக்குனர் திருமதி அம்சவேணி அவர்கள் மண் மற்றும் நீர் பாதுகாப்பில் பாரம்பரிய தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பிலும்,விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் திருமதி வளர்மதி அவர்கள் உயிர்ம வேளாண்மையில் விதைகளின் பங்கு என்ற தலைப்பிலும், விருதுநகர் வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைத்துறை துணை இயக்குநர் திருமதி செல்வி அவர்கள் உயிர்ம வேளாண்மை விலை பொருட்களின் விற்பனை வாய்ப்புகள் என்ற தலைப்பிலும், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபாவாசுகி அவர்கள் தோட்டக்கலையில் அங்கக வேளாண்மை என்ற தலைப்பிலும், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திருமதி இந்திரா அவர்கள் வேளாண்மையை எளிதாக்கும் இயந்திரங்கள் மற்றும் அரசு மானியத் திட்டங்கள் என்ற தலைப்பிலும், உதவி இயக்குநர்(விதை சான்று மற்றும் அங்ககச் சான்று) திருமதி கோகிலா அவர்கள் உயிர்மச் சான்றோளிப்பு மற்றும் பங்கேற்பாளர் உறுதியளிப்பு திட்டம் என்ற தலைப்பிலும், விருதுநகர் விற்பனை குழு செயலாளர் திரு.வேலுசாமி அவர்கள் உயிர்ம வேளாண்மையில் வணிகம் மேற்கொள்ளுதல் என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினார்கள்.மேலும், முன்னோடி விவசாயிகள் உயிர்ம வேளாண்மையில் தங்களின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

Aug 20, 2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Certification in videography and video Editing) பயிற்சி வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு  ஆதிதிராவிடர் வீட்டு  வசதி மற்றும்  மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு  மற்றும் வடிவமைப்பு  (Certification in  videography and video Editing)  பயிற்சி வழங்கப்படவுள்ளது .தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறுதிறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாகதற் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின  இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு   (Certification   in  videography  and   video    Editing)  பயிற்சி வழங்கப்படவுள்ளது.இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம்  ரூ.3 இலட்சத்திற்குள்  இருக்கவேண்டும்.  பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும்,  18  முதல்  30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பயிற்சிக்கான  கால அளவு மூன்று மாதங்கள் ஆகும்.  இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.  இப்பயிற்சியினை பெறதாட்கோ இணையதளமான(www.tahdco.com)  என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.  மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு  உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,.அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 19, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்  (18.08.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.   இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.காளிமுத்து, மாவட்ட நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.அமர்நாத், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 19, 2025

மதுரை வீட்டு வசதி பிரிவு ஒதுக்கீட்டாளர்கள் தவணைக் காலம் முடிவுற்றும் தவணைத் தொகை செலுத்தாத ஒதுக்கீடுதாரர்கள் 31.03.2026 ற்குள் வட்டி தள்ளுபடி போக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை ஒரே தவணையாக செலுத்தி பயன்பெறலாம்.

 தமிழ்நாடு  வீட்டு வசதி வாரியம், மதுரை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள  திட்டப்பகுதிகளில் உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் (சுயநிதி திட்டம் (ம) வணிக மனைகள் நீங்கலாக) ஒதுக்கீடு பெற்று 31.03.2015 ற்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்றும் தவணைத் தொகை செலுத்தாத ஒதுக்கீடுதாரர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மூலம் அரசாணை பிறப்பிக்கப்பட்டு அரசாணை எண். 116, நாள் 04.08.2025 ன்படி வட்டி சலுகை  அறிவிக்கப்பட்டுள்ளன.  எனவே, தவணைத் தொகை சரிவர செலுத்தாத ஒதுக்கீடுதாரர்கள் இந்த சலுகையினை பயன்படுத்தி வரும் 31.03.2026 ற்குள் வட்டி தள்ளுபடி போக  செலுத்த  வேண்டிய  நிலுவைத் தொகையினை ஒரே தவணையாக செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வட்டி தள்ளுபடி சலுகையின் சிறப்பம்சங்கள் :-மாதத் தவணைக்கான அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி, வட்டி முதலாக்கத்தின்  மீதான வட்டி முழுமையாக தள்ளுபடி, நிலத்திற்கான இறுதி விலை வித்தியாச தொகையில், ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாத வட்டி தள்ளுபடி.           கடந்த 31.03.2015 ற்கு முன்னர் தவணை காலம் முடிவுற்ற ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகையினை அறிந்து ஒரே தவணையில் தொகையினை செலுத்தி மேற்கண்ட வட்டி சலுகை திட்டத்தின் மூலம் பயன் பெற்று கிரையபத்திரம் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் (ம) நிர்வாக அலுவலர் திரு.ஆர். கார்த்திகேயன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 18, 2025

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (16.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், முடுக்கன் குளம் கிராமத்தில் ரூ.32 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் உபமின் நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுத்தினார்.அதனை தொடர்ந்து, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், ஆவியூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் மின் நிலையத்தினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மின் உபகரணங்களை முறையாக பராமரிப்பு செய்து, தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய அலுவலர்களை அறிவுறுத்தினார்.பின்னர், கடம்பங்குளம் கிராமத்தில் சூரிய ஒளி தகடுகள் அமைக்கப்பட்டுள்ளதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மின்சார உற்பத்தி பயன்பாடு குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.மேலும், காரியாபட்டி வட்டத்தில் வசிக்கும் பயனாளி ஒருவரின் இல்லத்தில் அரசின் மானியத்தின் மேற்கூரையில் சூரிய ஒளி தகடுகள் அமைக்கப்பட்டு, மின்சார உற்பத்தி செய்து பயன்படுத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளியிடம் அதன் பயன்கள் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.இந்த ஆய்வின் போது, ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் என அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் சென்றடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வில், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக அலுவலர்கள்  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 16, 2025

79-வது இந்திய சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையைமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (15.08.2025) நடைபெற்ற இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் வருகை தந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்.,த.கா.ப., அவர்கள் வரவேற்றார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காலை 9.05 மணியளவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்க விட்டார்.  பின்னர், சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக  வெள்ளை நிற புறாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பறக்க விட்டார்.காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 50 காவலர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய 15 மாவட்ட நிலை அலுவலர்களுக்கும், 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்தமை, 20 மற்றும் 10 ஆண்டுகள் விபத்தில்லா சேவை புரிமைந்தமை, மாநில அளவில் சிறந்த விவசாயிகளுக்கான விருதுகள், பசுமை சாதனையாளர் விருதுகளாக என 13 அலுவலர்களுக்கும், சதுரகிரி மலைப்பகுதி ஆக்கிரமிப்பு அகற்றுதலில் சிறப்பாக பணியாற்றிய 7 அலுவலர்களுக்கும் என பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த மொத்தம் 258 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்;ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம்) திருவில்லிபுத்தூர் திரு.தேவராஜ்,இ.வ.ப., திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு) திரு.வீ.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,இ.ஆ.ப., சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு, சிப்காட்) திரு.டி.செங்கோட்டையன், மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை)  திருமதி ஆனந்தி, திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், விருதுநகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.யோகேஷ் குமார், மாவட்ட நிலை அலுவலர்கள்,  வட்டாட்சியர்கள் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Aug 16, 2025

அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி கிராமத்தில் (15.08.2025) 79-வது சுந்திரதினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.இந்த கிராம சபைக் கூட்டத்தில், 01.04.2025 முதல் 31.07.2025 வரையிலான கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம், இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.இந்த கிராம சபைக் கூட்டத்தில், மேலும் பொதுசுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடைதுறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து தெரிந்து கொள்ளும் விதமாக விரிவாக எடுத்துரைத்தனர்.அரசு என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும். இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், ஜனநாயக நாட்டில், கிராமத்தில்; ஊராட்சி தலைவர்கள், மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் இருப்பார்கள். நாங்கள் எல்லாம் மக்களின் பணியாளர்கள். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரம் உங்களிடம் இருந்து பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழக அரசானது  அனைத்துத் துறைகளிலும் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. இம்முகாமானது கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும்.மேலும், தமிழகம்  முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்கீழ், 1256 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், 17 சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.தற்போது ஒவ்வொரு கிராமத்திலும் கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தின் மூலமாக அனைவருக்கும் வீடு வழங்கக்கூடிய திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.  அதனை தொடர்ந்து, இந்த கிராம சபை கூட்டத்தில் மருத்துவத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் பார்வையிட்டார்.மேலும், வேளாண்மை துறையின் சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் உளுந்து செயல் விளக்கத்திடல் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தோட்டக்கலைத்துறையின் சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வீரிய ஒட்டு ரக காய்கறி விதைகள் விவசாயிக்கு மானியமாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் விவசாயிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.அதனை தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.பின்னர் கிராமச்சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.1,00,000- வீதம் இரண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2,00,000-த்திற்கான சுழல் நிதிக்கான காசோலையினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த கிராம சபைக் கூட்டத்தில்,  திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) (பொ)  திரு.பாலசுப்பிரமணியன், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.ரமேஷ், மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 16, 2025

விநாயகர் சதுர்த்தி மற்றும் அதன் பின்னர் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், எதிர்வரும் 27.08.2025 அன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் அதன் பின்னர் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில் (14.08.2025) நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில், எதிர்வரும் 27.08.2025 அன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் அதன் பின்னர் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, அரசின் விதிமுறைகள் மற்றும் மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் வழிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில், விநாயகர் சிலைகள் கரைக்கூடிய இடங்களாக தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இடங்கள்:- விருதுநகரைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து வரும் சிலைகள் கல்கிடங்கில் கரைக்க வேண்டும். ஆவுடையாபுரத்திலிருந்து வரும் சிலைகள் அங்குள்ள உபயோகப்படுத்தப்படாத கிணற்றில் கரைக்க வேண்டும். சிவகாசி நகர்ப்புறங்களில் இருந்து வரும் சிலைகள் தெய்வாணை நகரில் உள்ள உபயோகப்படுத்தப்படாத கிணற்றில் கரைக்க வேண்டும். ஆ.புதுப்பட்டி மாரனேரி ஊர்களில் இருந்து வரும் சிலைகள் மாரனேரி கண்மாயில் கரைக்க வேண்டும். திருவில்லிபுத்தூர்  நகரிலிருந்து வரும் சிலைகள் திருவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் கரைக்க வேண்டும்.பந்தல்குடியைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து  வரும் சிலைகள் பந்தல்குடி பெரிய கண்மாயில் கரைக்க வேண்டும். இராஜபாளையம் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள சிலைகள் ஜெயவிலாஸ் பஸ் கம்;பெனிக்கு எதிர்புறம் உள்ள வடுகவூரணியில் கரைக்க வேண்டும். அம்மாபட்டி, ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளத்திலிருந்து வரும் சிலைகள் அப்பகுதியிலுள்ள  உபயோகப்படுத்தாத கிணறு, தெப்பம் மற்றும் ஆலங்குளம் குவாரி பகுதியில் கரைக்க வேண்டும். கிருஷ்ணன்கோவில் சிலைகள் இராமச்சந்திராபுரம் கண்மாயில் கரைக்க வேண்டும். குன்னூர் சிலைகள் குன்னூர் கண்மாயில் கரைக்க வேண்டும்.வத்திராயிருப்பு மற்றும் கூமாபட்டி சிலைகள் மகாராஜபுரம் மற்றும் கூமாபட்டி பெரியகுளம் கண்மாயில் கரைக்க வேண்டும். அருப்புக்கோட்டை நகர்புறத்தில் இருந்து வரும் சிலைகள் பந்தல்குடி சாலையில் உள்ள பெரியகண்மாயில் கரைக்க வேண்டும் திருவில்லிபுத்தூர் தாலுகாவிலிருந்து வரும் சிலைகள் திருவண்ணாமலை  கோனகிரி குளத்தில்  கரைக்க வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது சிலை அமைப்பினர் , நிர்வாகிகள் ஊர்வலம் அமைதியான முறையில்  நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறையினருக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும்  மேற்கூறிய விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.27.08.2025 ஆம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனை இன்றி சுமுகமாக நடைபெற கண்காணிக்கும் பொருட்டு விழா ஏற்பாட்டாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்:-விழா ஏற்பாட்டாளர்கள் விநாயகர் சிலைகள் நிறுவவும் மற்றும் ஊர்வலம் நடத்தவும் படிவம் -1-ல் சிவகாசி சார் ஆட்சியர், மற்றும் சாத்தூர்,அருப்புக்கோட்டை, வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர்களிடமிருந்து உரிய அனுமதி பெற  வேண்டும்.சிலை உற்பத்தியாளர்கள் / சிலை வடிவமைப்பாளர்கள்ஃ கைவினைஞர்கள் ,கலைஞர்கள் ஆகியோர்களுக்கு சிலை செய்வதற்கான உரிமம் அல்லது அனுமதி ஆனது சம்மந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் நகர்புற நிர்வாகத்தினரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.பொது அமைதி மற்றும் பாதுகாப்பு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை பேணும் பொருட்டு வருவாய்த்துறை ஃ காவல்துறை / மாசுகட்டுபாட்டு வாரியம் ஆகிய துறையினரால் வகுக்கப்படும் நிபந்தனைகளை கண்டிப்பாக விழா ஏற்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டும்.விநாயகர் சிலைகள் களிமண்ணால் மட்டுமே செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்ட்டர் ஆப் பாரீஸ் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) போன்ற பொருட்களால் சிலைகள் அமைக்கப்படக் கூடாது.  சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம் ஃ எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.  மேலும் சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது.  மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய ஃ நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம்.சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்ஃபந்தல்கள் ஆகியவைகளை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் போன்ற பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.சிலைகள் நிறுவப்படும் இடங்களில் அமைக்கப்படும் தற்காலிக அமைப்பு, எளிதில் தீப்பற்றாத பொருட்களைக் கொண்டு (தகரம் மற்றும் சிமிண்ட் அட்டை) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். சிலையைச் சுற்றிலும் பாதுகாப்பான தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கண்டிப்பாக எளிதில் தீப்பற்றக் கூடிய தென்னங்கீற்று போன்ற பொருட்களிள் பயன்பாடு கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.சிலைகளானது அடி மட்டத்திலிருந்து அதாவது மேடை மற்றும் பீடம் உட்பட அதிகபட்சம் 10 அடி உயரத்தில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.மற்ற வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனை மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்கள் அருகில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அனுமதி கிடையாது.கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது.  ஒலிபெருக்கியினை காலை 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் வழிபாட்டு நேரங்களில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும்.சிலைகள் வைக்கப்படும் இடங்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத இடத்தில் வைக்க வேண்டும்.சிலைகள் வைக்கும் இடம், ஊர்வலம் செல்லும் பாதை போன்றவற்றை குறிப்பிட்டு அனுமதி பெற வேண்டும்.சிலைகள் அமைக்கும் விழா குழுவினர், சிலை குழு அமைத்து, சிலை வைக்கப்பட்ட நாள் முதல், சிலையை கரைக்கும் நாள் வரை குறைந்தபட்சம் இரு நபர்கள் தொடர்ந்து காவல் துறையினருடன் சேர்ந்து  24 மணி நேரமும்  பாதுகாப்பு அலுவலில் இருக்க வேண்டும்.அரசியல் மற்றும் சாதி ரீதியான டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு அனுமதி கிடையாது.விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட தேதியிலிருந்து 5 தினங்களுக்குள் சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.ஊர்வலம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் காவல்துறையினர் அனுமதிக்கும் வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவேண்டும்.ஒவ்வொரு சிலைக்கும் ஒவ்வொரு நாளும் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்ட குழு உறுப்பினரின் பெயர், விலாசம், கைபேசி எண் ஆகியவற்றை முன்கூட்டியே தேதி வாரியாக பட்டியலிட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் எழுத்து மூலமாக கொடுக்க வேண்டும்.ஊர்வலத்தின்போது பிற மதத்தினரின் மனதை புண்படுத்தும்படியான கோசங்களோ, வாசகங்களையோ பயன்படுத்தக்கூடாது.விநாயகர் சிலைகளை மினி லாரி மற்றும் டிராக்டர்கள் ஆகியவற்றில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மாட்டுவண்டிகளில் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.மோட்டார் வாகனச்சட்டம் 1988-ன் படி அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்கக்கூடிய வாகனங்களில் செல்ல வேண்டும்.வருவாய் கோட்டாட்சியரின் அனுமதியில்லாமல் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றப்படும்.அவ்வப்போது நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு, அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மாற்றம் செய்யவோ, வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவோ காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினருக்கு அதிகாரம் உண்டு.ஊர்வலத்தின்போது ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடாது. பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.ஊர்வலம் செல்லும்போது பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ இடையூறு செய்யக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.கடந்த காலங்களில் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலை வைக்க வேண்டும். புதிய இடங்களில் சிலைகள் வைக்கவும்,  புதிய வழித்தடங்களில் செல்லவும் அனுமதி மறுக்கப்படுகிறது.விழா ஏற்பட்டாளர்கள், பந்தல்கள் மற்றும் மின் அமைப்பு அலங்காரங்கள் ஆகியவைகளுக்கான அனுமதியினை உரிய அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.விழா ஏற்பட்டாளர்கள், வழிபாட்டுப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எளிதில் எரியக்கூடிய பொருட்கள் ஏதும் இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.விழா ஏற்பட்டாளர்கள், விநாயகர் வழிபாட்டின் போது அங்கீகரிக்கப்படாத மின் இணைப்பு மற்றும் மின் திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் ஏதும் இல்லை  என்பதை உறுதி செய்திட வேண்டும்.விழா ஏற்பட்டாளர்கள், விநாயகர் வழிபாட்டு மற்றும் ஊர்வலத்தின் போது,  போதிய முதலுதவி மற்றும் அவசர மருத்துவ வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா உட்பட அரசு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Aug 16, 2025

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகள் பங்கு பெற்று பயனடையலாம்.

கிராம ஊராட்சிகளில் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சி பெற்று தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றிடவும், தரிசு நிலங்களை விளைநிலங்களாக சாகுபடிக்கு கொண்டு வரவும் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் உழவர் நலன் சார்ந்த பிற துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்திட கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2025-26-ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து குறைந்த பட்சம் 10  ஏக்கர் தரிசு நிலத்தை தொகுப்பாக ஏற்படுத்தி அத்தொகுப்பில் நீர் ஆதாரங்கள் மற்றும் நுண்ணீர் பாசனம் அமைத்து சாகுபடிக்கு கொண்டு வர இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தரிசாக உள்ள தனிப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் இருக்கும் முட்புதர்களை அகற்றி நிலத்தினை சமன் செய்து உழுவதற்கு எக்டர் ஒன்றுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.9600/- மானியம் வழங்கப்படுகிறது. வரப்புகளில் பயறு சாகுபடியை ஊக்குவிப்பதற்காக ஒரு எக்டருக்கு 5 கிலோ பயறு விதைகளுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.300/- மானியம் வழங்கப்படுகிறது. நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை பெருக்கி மண்வளத்தினை மேம்படுத்துவதற்கான செயல் விளக்கத் திடல்கள் அமைத்திட எக்டர்  ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.450/- வரை மானியமாக வழங்கப்படுகிறது. விசைத்தெளிப்பான் அல்லது பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் 50 சதவீதம்  மானியத்தில் அதிககட்சமாக ரூ.3000/- வரை மானியமாக வழங்கப்படுகிறது.எனவே வேளாண் பெருமக்கள் நடப்பு 2025-26-ம் ஆண்டு கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பங்கு பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 83 84 85 86 87 88 89 ... 140 141

AD's



More News