25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Oct 15, 2025

வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெறவிருப்பதையொட்டி, வாக்களர்கள் கணக்கெடுப்புப் படிவம் மற்றும் இணைப்பு ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்தின் வலைதளம் மூலமாக சுயமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

01.01.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளைத் தொடங்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக அனைத்து வாக்காளர் பதிவு  அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான வட்டாட்சியர்கள் மற்றும் மாநகராட்சி / நகராட்சி ஆணையர்கள் ஆகியோருக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 09.10.2025 அன்று பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணிகள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. வாக்காளர்களின் விபரங்கள் அச்சிடப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களை ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடு வீடாகச் சென்று வழங்கி, அப்படிவங்களில் வாக்காளர்கள் கையொப்பம் பெற்று அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தவர்கள் அப்படிவங்களுடன் எந்த ஆவணத்தையும் இணைக்கத் தேவையில்லை என்றும், மற்றவர்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஒன்றை இணைத்து அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.மேலும், கணக்கெடுப்புப் படிவம் மற்றும் இணைப்பு ஆவணங்களை வலைதளம் மூலமாக வாக்காளர்கள் சுயமாக பதிவேற்றம் செய்யவும் இயலும் என்றும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை www.virudhunagar.nic.in என்ற விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டவுடன் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் இதே போன்ற பயிற்சிகளை அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலர்கள் அளிப்பார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 14, 2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் (13.10.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்கள் மீது தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ.முக்குளம்  இந்து அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்த (லேட்) திருமதி ஜி.மகாலட்சுமி என்பவர் பணிக்காலத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரின் வாரிசுதாரரான மகள் திருமதி கு.அம்பிகாபாண்டி என்பவருக்கு நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், ஒட்டங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையும், பின்னர், 2024-2025 ஆம் நிதியாண்டில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்கிய இராஜபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு முதற்கட்டமாக ரூ.1.41 கோடி புரவு தள்ளுபடி தொகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக திருவில்லிபுத்தூர் மற்றும் விருதுநகர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.64.00 இலட்சம் புரவு தள்ளுபடி தொகைக்கான காசோலையினையும்,பின்னர், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், வடகரையில் மெ/ஸ்.யுவராஜ்  பயர் ஒர்க்ஸ்   பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் மரணமடைந்த திருமதி சவுண்டம்மாள்,  திருமதி பேச்சியம்மாள்,  திரு. கருப்பையா, திரு. கணேசன் ஆகிய  நான்கு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.4.00 இலட்சங்களும்,  வெடி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்த திரு. முருகன் என்பவரின் வாரிசுதாரருக்கு ரூ.1.00 இலட்சமும் மற்றும் வெடி விபத்தில் படுகாயமடைந்த திருமதி மாரியம்மாள், என்பவருக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தம் 17 இலட்சத்து 50 ஆயிரம் முதலமைச்சர் பொது நிவாரண தொகைக்கான  காசோலைகளை   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 13, 2025

போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் அங்கன்வாடி மையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் (12.10.2025)பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,IAS.,அவர்கள்தலைமையில்வருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை இந்தியாவிலிருந்து ஒழிக்கும் பொருட்டு கடந்த 1995 ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளாக தீவிர முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தேசிய பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் விருதுநகர், மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.இம்முகாமில் பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0-5 வயது) அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள், கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 1,137 மையங்கள் மூலம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 1,30,437 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.  இம்முகாமில் சுகாதாரப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட4580 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   மேலும் 28 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு இலங்கை அகதிகள் முகாம், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும்,46 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள பந்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 28 மையங்கள் மற்றும் 1 நடமாடும் குழு, கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 22 மையங்கள் மற்றும் 2 நடமாடும் குழுக்கள் மூலமும், பாலவநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 13 மையங்கள் மற்றும் 1 நடமாடும் குழு, மலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 11 மையங்கள், அருப்புக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 17 மையங்கள் மற்றும் 1 நடமாடும் குழு என மொத்தம் 96 குழுக்கள் மூலம் 364 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, 5 வயதிற்குட்பட்ட சுமார் 11,676 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.ஏற்கனவே முறையான தவணைகளில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் இம்முகாமிலும் சொட்டு மருந்து தவறாது கொடுக்கப்பட வேண்டும். லேசான ஜூரம், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம்.எனவே, பொதுமக்கள் அனைவரும் 5 வயதிற்குட்ட தங்கள் குழந்தைகளை போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து வழங்கி, குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாத்து போலியோ இல்லாத சமுதாயத்தை அமைக்க ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.யசோதாமணி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, அருப்புக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திருமதி சுந்தர்லட்சுமி சிவப்பிரகாசம், அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் திரு.ராஜமாணிக்கம் உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவப்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Oct 13, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வாயிலாக நடத்தப்பட்ட கிராமசபைக் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில்  (11.10.2025) நடத்தப்பட்ட கிராமசபைக் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டதைத் தொடர்ந்து, காரியாபட்டி வட்டம் கல்குறிச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராமசபை ஒப்புதல் பெறுதல், சாதிப்பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயரை மாற்றுதல் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் (01.04.2025 முதல் 30.09.2025 முடிய), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், சபாசார் செயலி செயல்பாடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, தூய்மை பாரத இயக்க (ஊரக) திட்டம், தொழிலாளர் துறை,  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – தீன்தயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் பயிற்சித் திட்டம், இதர பொருட்கள் தொடர்பான கூட்டம் உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான மூன்று அத்தியாவசியமான தேவைகளை அவர்களிடம் பெற்று உடனடியாக மாவட்ட அளவில் முடிக்க வேண்டிய பணிகளை இவ்விடத்திலேயே முடிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக, நம்முடைய   கல்குறிச்சி ஊராட்சியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கு  7- வகையான பணிகள் சுமார் ரூ.41 இலட்சத்தில் முடிக்கப்பட்டு உள்ளது.தற்போது, 2025-2026-ல் கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் 15 வீடுகள் சுமார் ரூ.68 இலட்சம் மதிப்பிலும், மற்ற 18 வகையான பணிகள் சுமார் ரூ.50 இலட்சம் மதிப்பிலும் என மொத்தமாக 1.8 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.2024-2025-யில் கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் 3-வீடுகளும், பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் ஒரு   வீடும், இதர 12 பணிகள்  ரூ.79 இலட்சத்திலும் என  மொத்தமாக ரூ.1.36 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்றுள்ளன. இதுபோன்று, 450 கிராம ஊராட்சிகளிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, குறிப்பாக உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாம்கள் மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.349 முகாம்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏறத்தாழ 285 முகாம்கள் முடிக்கப்பட்டு அவற்றில் 60,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அம்மனுக்களில் 70 சதவீதம் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சேவைகள் அனைத்தும் மக்களை சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதுபோன்று, மற்றொரு திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பல்நோக்கு சிறப்பு மருத்துவர்கள் களத்திற்கே சென்று பொதுமக்களுக்கு இரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றனர். பட்டா வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு பட்டா, வங்கிக் கடன் தேவைப்படுவோருக்கு வங்கி கடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள்  உடனடியாக வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், இக்கூட்டத்தில் இன்று விண்ணப்பம் அளித்த 14 நபர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை  செய்யப்பட்டு  அவர்களின் தேவைகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தற்போது பூர்த்தி செய்ய உள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி வாழ்வில் மேன்மை அடைய வேண்டும் என தெரிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிக்கு மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.முருகானந்தம், உதவி இயக்குநர்(தணிக்கை) திரு.முருகன், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, காரியாபட்டி வருவாய் வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 13, 2025

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை,  அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்  (11.10.2025)  அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக /நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை  துவக்கி வைத்தார்.இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் MRF, V.V.V & SONS EDIBLE OIL, ROYAL ENFIELD ACADEMY, APOLLO PHARMACIES, MEENAKSHI MISSION HOSPITAL, LAKSHMI MILLS WORK COIMBATORE, SENTERSOFT TECHNOLOGIES, ELEVATE DIGI TECHNOLOGIES போன்ற  100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10000- க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்தனர்.இந்தியாவிலேயே கல்விகள் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஒரு காலத்திலே கல்வியறிவு  குறைவாக இருந்த காலத்தில் கடந்த 50 ஆண்டு காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியினை பெற்று, பட்டப்படிப்பு படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அதற்கு காரணம், நம்முடைய மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர்  அவர்கள்.அவர்கள் வழியில் வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடும் வகையில், இது போன்ற, வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறார்கள்.படிக்கின்ற காலத்தில் படிப்புச் செலவிற்கு தனது வீட்டை எதிர்பாராமல் சுயமாக படிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.இன்று உலகிலேயே இளைஞர்கள் அதிகமாக உள்ள நாடு நமது இந்தியா தான். இளைஞர்கள் அதிகம் என்றால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. அந்த வேலை வாய்ப்பினை அமைத்து தரும் பொருட்டு இந்த வேலை வாய்ப்பு முகாமினை அமைத்து கொடுத்துள்ளோம்.இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்று, தாங்கள் வேலைபார்த்த அனுபவத்தை வைத்து மற்றொரு நிறுவனத்தில் பணிபுரியும் போது முன் அனுபவத்தை வைத்து அதற்கான சிறப்பான ஊதியம்  கிடைக்கும்.சிரமங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. இன்றைய போட்டிகள் நிறைந்த காலகட்டத்திலே சிரமப்பட்டு தான் முன்னேற முடியும். சிரமப்பட்டு தான் சாதிக்க முடியும்.அந்த வகையில் தமிழ்நாட்டின் இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்கக்கூடிய வகையில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் நன்றாக படிப்பதற்கு ஏதுவாக நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.நான் முதல்வன் திட்டமானது மாணவர்கள் அரசுத்தேர்வுகள் எழுத வழிவகை செய்கிறது. இது போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  கொண்டு வந்துள்ளார்.அதனடிப்படையில் இன்று இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக /நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை ஏற்படுத்தியுள்ளார்கள். இதனை பயன்படுத்தி இளைஞர்கள் பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல  இணை இயக்குநர்(வேலைவாய்ப்பு) மரு.கா.சண்முகசுந்தர், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்கள் திருமதி ஞானபிரபா, திருமதி பிரியதர்ஷினி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் திரு.ராஜமாணிக்கம், தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் உமாராணி, அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 11, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில்அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் (10.10.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.மேலும், இம்முகாம்களை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு, அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில்  நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தலைமையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு நேரில் சென்று ஆய்வு செய்தார். முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியானது, பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்கள் அவர்களின் வீடுகளுக்கே தேடி சென்று கிடைக்கும் வகையில் அமைந்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.ஒரு  நல்ல அரசாங்கம் எவ்வாறு இருக்க வேண்டுமென்றால், அரசாங்கத்தை தேடி மக்கள் அலுவலகத்திற்கு செல்வதை காட்டிலும், மக்களை தேடி அரசாங்கமும், அரசு அலுவலர்களும்  இருப்பிடத்திற்கே சென்று அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, அதனை நிறைவேற்றுவது தான் ஒரு நல்ல அரசாங்கத்தின் அடையாளமானதாகக் கருதப்படும். இம்முகாம்கள் வாயிலாக, அரசின் பல்வேறு துறைகள் சேவைகளானது, ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் செயல்பட்டு பொதுமக்களின் பல தரப்பட்ட மனுக்களின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அம்மனுக்களின் மீது 45 – நாட்களுக்குள்ளாக தீர்வு காண வேண்டும் என்பதே இம்முகாமின் நோக்கம்.இதனடிப்படையில், உருவாக்கப்பட்ட மற்றொரு திட்டம் தான் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம், பொதுமக்களின் நலனை பேணி காக்கும் வகையில், தங்கள் இருப்பிடத்திற்கே தேடி சென்று முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டங்கள் செயலாற்றி வருகின்றன.                        இது போன்ற, முகாமில் மகளிர் உரிமைத்தொகை கோரி பெரும் அளவில் மகளிர் மனுக்கள் அளித்து வருகின்றனர். அது போல, பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பித்த மனுக்கள் மீது மக்கள் அலுவலகத்திற்கு செல்லாமல், இம்முகாம்களிலேயே தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.பெயர் மாற்றப் பணிகள், சரிபார்த்தல் பணிகள் என அனைத்து வகையான மனுக்கள் மீது இம்முகாம்களிலேயே  தீர்வு காணலாம். பொதுவாக ஒரு மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் பொழுது நேர்மறையாக, பொதுமக்களுக்கு அதன் நன்மைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன்  முதலமைச்சர் அவர்கள் இது போன்ற திட்டங்களை வகுத்திருக்கிறார்.மேலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய பேருந்து நிலையம், சமத்துவபுரம் மற்றும் கல்லூரி போன்றவைகளும், சித்தலக்குண்டு அருகில் பள்ளியும், கிராமத்தைச் சுற்றி ITI-தொழில்நுட்பக் கல்லூரியும் அமையப் பெற்று பல்வேறு வளர்ச்சிகளை பெற்று வளர்ந்துள்ளதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது எனத் தெரிவித்தார்.                        என்றைக்கும் நம்முடைய முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தக்கூடிய அளவில் பொதுமக்கள் செயல்பட வேண்டும் என  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இன்றைய தினம், திருச்சுழி வட்டாரத்தில் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.அந்தவகையில், தற்போது விருதுநகர் மாவட்டத்தில் 279 முகாம்கள் நடைபெற்ற நிலையில்58, 000 மனுக்கள் பெறப்பட்டு  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களின்ஆணைக்கிணங்கஅம்மனுக்களின்மீது45நாட்களுக்குள்ளாகதீர்வுகாணப்பட்டுவருகிறது.அதனைத்தொடர்ந்து, மகளிர் உரிமைத்தொகை வேண்டி 55,000 மனுக்கள் பெறப்பட்டு அம்மனுக்களில் 50,000 மனுக்கள் சரிபார்த்தல் நிலையில் உள்ளன.                        இதுபோல, பல்வேறு நலத்திட்டங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் மக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும், இம்முகாமில் மின்னனு குடும்ப அட்டை, பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பித்த மனுக்கள், மின் இணைப்பில் பெயர் மாற்றம் மற்றும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில்,  திருச்சுழி வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 11, 2025

திருச்சுழி  ஊராட்சி ஒன்றியத்தில், அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்   அவர்கள் முன்னிலையில், அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி  ஊராட்சி ஒன்றியத்தில்,  (10.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள் முன்னிலையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ரூ.5.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.60 கோடி மதிப்பில் 1097.22 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேருந்து நிற்கும் இடம், கடைகள், ஓய்வறை, மழைநீர் வடிகால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, இருசக்கர வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டுமானப் பணிகளைநிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பார்வையிட்டு கட்டுமானப் பணிகளை துரிதமாக முடித்து விரைவில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். இந்நேர்வில்,  திட்ட இயக்குநர்(மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், முன்னாள் திருச்சுழி ஊராட்சி ஒன்றியகுழுத் தலைவர் திரு.பொன்னுத்தம்பி, திருச்சுழி வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Oct 11, 2025

உலக  சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, குறும்படம் மற்றும் வினாடி-வினாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக சுற்றுலா தினம்- 2025  முன்னிட்டு இவ்வாண்டிற்கான கருப்பொருளான "சுற்றுலாவும் நிலையான மாற்றமும்" (Tourism And Sustaintable Transformation ) என்ற கருத்துருவின் அடிப்படையில் கல்லூரி மாணவ, மாணவியரிடையே நடைபெற்ற  கட்டுரை, குறும்படம்(Short flim), வினாடிவினா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் வழங்கினார்.          சுற்றுலாத்துறையின் சார்பாக, விருதுநகர் சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி  நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி, சாத்தூர் மற்றும் வி.வி.வி. கல்லூரி மற்றும் விருதுநகர் இந்து நாடார் செந்தில்குமாரா நாடார் கல்லூரி, கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன் கோவில் மற்றும் எஸ்.எப்.ஆர்.கல்லூரி சிவகாசி வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை இணைந்து கல்லூரி மாணவ/மாணவர்களுக்கு “சுற்றுலாவும் நிலையான மாற்றமும்” என்ற  கருப்பொருளின் அடிப்படையில் 26.09.2025 அன்று சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி  நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி மற்றும் சாத்தூர் கல்லூரியில் கட்டுரைப்போட்டி, குறும்படப் போட்டி மற்றும் வினாடி-வினாப் போட்டிகள் நடத்தப்பட்டது.            மேலும், இந்நிகழ்வின் தொடர்ச்சியாக 27.09.2025 அன்று முக்கிய சுற்றுலாத்தளமானஸ்ரீ நாச்சியார் ஆண்டாள் திருக்கோவில், ஸ்ரீ வில்லிபுத்தூரில் சுற்றுலாத்துறையின் சார்பில், சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், சுற்றுலா அலுவலர் திரு.ப.முனியப்பன்(மு.கூ.பொ), அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ / மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 11, 2025

தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடும் நோக்கில், விதிமீறல்களில் ஈடுபடும் விற்பனை நிலையங்களுக்கு தடையின்மைச் சான்று மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தகவல்.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை வெடி விபத்தில்லா தீபாவளியாகக் கொண்டாடும் நோக்கிலும்,வெடிபொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான பணிகளில் ஈடுபட்டு  வரும் தொழிலாளர்களது பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாகவும் விருதுநகர் மாவட்ட நிருவாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் வெடிபொருள்கள் சில்லறை விற்பனை நிலைய உரிமதாரர்கள் அனைவரும், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி செயல்பட்டு, மாவட்ட நிருவாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும், கடைகளின் முன்புறம் பாதுகாப்பு தூரத்திற்குள் ஆபத்தான முறையில் வாடிக்கையாளர்களுக்கு வெடிபொருள்களை வெடித்துக் காட்டக்கூடாது எனவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கடைகளின் முன்புறம் தற்காலிக கட்டுமானங்களை அமைக்கக்கூடாது எனவும்,மாவட்ட நிருவாகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு வெடிபொருள்கள்  இருப்பு வைத்திருத்தல்,  உரிய தீயணைப்பு சாதனங்கள் இல்லாதிருத்தல், தடை செய்யப்பட்ட வெடிபொருள்களை விற்பனை செய்தல் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்துதல் உள்ளிட்ட வேறு ஏதேனும் விதிமீறல்கள் ஆய்வின்போது கண்டறியப்படின், தொடர்புடைய வெடிபொருள்கள் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட தடையின்மைச் சான்று மற்றும் உரிமம் நிரந்தரமாக இரத்து செய்யப்படுவதுடன், உரிமதாரர் மீதும் அரசு விதிமுறைகளின்படி குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Oct 11, 2025

தேசிய பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 12.10.2025 அன்று நடைபெற உள்ளது.

போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை இந்தியாவிலிருந்து ஒழிக்கும் பொருட்டு கடந்த 1995 ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளாக தீவிர முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது  தேசிய பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் விருதுநகர், சிவகங்கை, செங்கல்கபட்டு, மயிலாடுதுறை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 12.10.2025 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற இருக்கிறது.இம்முகாமில் பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0-5 வயது) அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதில் விருதுநகர் மாவட்டத்தில்; 1,30,437 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் 1,137 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.  இந்த மையங்கள் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள். கோயில்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.இம்மையங்களில் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.மேலும் ரயில், பஸ்நிலையம், தியேட்டர், தங்கும் விடுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் „நடமாடும் முகாம்… மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே முறையான தவணைகளில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் இம்முகாமிலும் சொட்டு மருந்து தவறாது கொடுக்கப்பட வேண்டும்.  லேசான ஜூரம், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும். போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம்.இம்முகாமில் 4580 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.  இதில் சுகாதாரப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அடங்குவார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் 28 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு இலங்கை அகதிகள் முகாம், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0 - 5 வயது)  குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  மேலும் 46 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு ரயில்வே ஸ்டேசன், பேருந்து நிலையங்கள், கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.ஆகையால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை 12.10.2025 (ஞாயிற்றுக் கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து வழங்கி,  குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாத்து ஊனம் இல்லாத சமுதாயத்தை அமைக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1 2 ... 68 69 70 71 72 73 74 ... 140 141

AD's



More News