25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 13, 2025

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெங்கடேஸ்வரா மஹாலில் (13.03.2025)  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,  அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நகராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், கிராம குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், நீர்வளத்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக் கல்வித்துறை, மதிய உணவு திட்டம், வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, 15 வது பொது நிதி குழு மானியத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், மாநில நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், மாநில நிதி கழகம், கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் திட்டம்,  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், பொது நூலகத்துறை, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, நமக்கு நாமே திட்டம், நபார்டு நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், அனைத்து வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர் நீர் இயக்கம், நெடுஞ்சாலை சாலை மற்றும் சிறு பாலங்கள், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், பொது நிதி, கனிமவள நிதி உட்பட பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதிகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்புடைய அரசு அலுவலர்களை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  அவர்கள் அறிவுறுத்தினார்.மேலும், பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகள், நிலுவையிலுள்ள பணிகள், முடிவுற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகளை விரைந்தும், தரமானதாகவும் உரிய காலத்திற்குள் செய்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் அரசின் அனைத்து திட்டங்களும் சாமானிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பிரத்யேக திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து தொடர்ச்சியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்பட்டு வருகிறது.ஊராட்சி ஒன்றியங்களில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் அரசு அதிகாரிகள் மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும். குடிநீர் விநியோகம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல் கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தகுதியான பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கென அரசு நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். சாலை மேம்பாட்டு பணிகளை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும். அருப்புக்கோட்டை மற்றும் இராஜபாளையம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள் திட்டப் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மிக விரைவில் கொண்டுவர வேண்டும்.ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துடன் இணைந்து, தண்ணீர் வழங்காமல் உள்ள கிராமங்களில் சம்மந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் நிர்வாக சிக்கல் இருக்கும்பட்சத்தில் அதனை மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளைசெய்யவேண்டும்எனதெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 13, 2025

இக்குழந்தைகளை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால், இவ்வறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

சிறுவன் இப்ராஹிம் (16) கேரளா மாநிலம், மலப்புரம் குழந்தைகள் நலக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டார். கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் கோவிட் பெருந்தொற்றினால் தந்தை இறந்து விட்டநிலையில் தாயார் எங்கு இருக்கிறார் என்று தெரியாத நிலையில் இருந்த சிறுவன். இப்ராஹிம் (16) என்பவரை கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக தற்காலிக வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் மூலம் தகுதியான குடும்பத்தில் இணைத்துள்ளனர். சிறுமி. பத்ரா பேபி (17) அவருடைய தாயார் கேரளா மாநிலத்தில் இருந்து வரும் நிலையில், தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும், அவர் சிறுமியை கவனித்து கொள்வதற்கு தயாராக இல்லை என்று தாயார் தெரிவித்துள்ளார் என்பதால் சிறுமி பத்ரா பேபி (17) என்பவரை கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக தற்காலிக வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.இக்குழந்தைகளை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால், இவ்வறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், குழந்தையை உரிமை கோரி எவரும் தொடர்பு கொள்ளாத நிலையில், கேரளா மாநிலம், மலப்புரம் குழந்தைகள் நலக்குழுவினால் குழந்தைகளுக்கு சட்டப்படி தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும்.  மேலும் விவரங்களுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5. வ.உ.சி. நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் - 626003. தொலைபேசி -  04562 - 293946 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,   I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 13, 2025

விருதுநகர் மாவட்டம் தேசிய சுகாதார திட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நிரப்பப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்டம் தேசிய சுகாதார திட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்  2 மருத்துவ அலுவலர்கள், 2 செவிலியர்கள், 2 சுகாதார ஆய்வாளர்கள், 2 மருத்துவமனை பணியாளர்கள்  நிரப்பப்பட உள்ளது.இப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள் இனசுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியவை குறித்த விவரத்தினை இம்மாவட்டத்தின் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ 24.03.2025 பிற்பகல் 5.45 மணி வரை சமர்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 12, 2025

சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 19.03.2025 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 19.03.2025 அன்று பிற்பகல் 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட மத்திய மாநில சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Mar 12, 2025

"Coffee With Collector” என்ற 154-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(12.03.2025) சிவகாசி AAA பொறியியல் கல்லூரியில் பயிலும் 60 மாணவர்களுடன் நடைபெற்ற "Coffee With Collector” என்ற 154 ஆவது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 154-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.தமிழ் ஆர்வத்தை வளர்த்தல், சிறுகதை படைத்தல், படைப்பிலங்கியங்கள், தமிழ் அறிஞர்கள் குறித்தும் கல்லூரி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.    

Mar 12, 2025

ரூ.4.49 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் (12.03.2025) ரூ.4.49 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், 23 பயனாளிகளுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பிலான ஆதிதிராவிட நத்தம் நிலங்களில் வழங்கப்படும் வீட்டுமனை ஒப்படைக்கான இணையவழி பட்டாக்களை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை ஏற்படுத்துதற்கு பல்வேறு திட்டங்கைள வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்;டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதித்திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது.அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.அதன்படி, இன்று ரூ.4.49 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று துவக்கி வைக்கப்பட்டது.மேலும், இந்த புதிய கட்டடம் தரைத்தளம் 6921.19 சதுரடி பரப்பளவிலும்,  முதல்தளம் 6232.30 சதுரடி பரப்பளவிலும் என  வட்டாட்சியர் அலுவலக அறை, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அறை, கணிப்பொறி அறை, அலுவலக அறை, விசாரணை அறை, கூட்ட அரங்கம், பதிவுகள் வைப்பறை, ரசீது மற்றும் தபால் அனுப்பும் அறை, அலுவலர், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சாய்வுதளம், ஆழ்துழை கிணறு அமைத்து தண்ணீர் வசதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது என மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.செந்தூர், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் திரு.வள்ளிக்கண்ணு, அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் திரு.செந்தில்வேல், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 12, 2025

130 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.1.33 கோடி மதிப்பிலான திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயங்கள் மற்றும் திருமண நிதியுதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (12.03.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், அருப்புக்கோட்டை, சாத்தூர்,வெம்பக்கோட்டை,திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 130 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.79.12 இலட்சம் மதிப்பில் தங்க நாணயங்கள் மற்றும்  ரூ.53.75 இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகள் என மொத்தம் ரூ.1.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.மக்களால் அமைக்கப்பட்ட   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழியில் செயல்படும் தமிழக அரசு, மக்கள் நலன் காக்கும் அரசாக, செயல்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான திட்டங்களை தீட்டி, செயல்படுத்தி வருகிறது.பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.போதிய பணவசதி இல்லாத காரணத்தால் ஏழை பெண்களின் திருமணம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக திருமண நிதியுதவி திட்டம் கொண்டு வரப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.திருமண உதவித் திட்டம் என்பது, பொருளாதார அளவில் நலிவுற்ற, ஏழை விதவை தாய்மார்களின் மகள்களுக்கு திருமணத்தினை நடத்திட போதிய வசதி இல்லாமல் ஏற்படும் சிரமத்ததை தவிர்த்திக்கும் வகையிலும், சமூகத்தில் பிறப்பு அடிப்படையிலான இனப்பாகுபாட்டினை களைந்து சமநிலையை உருவாக்கிடவும், தாய், தந்தையர்கள் இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவிட தாலிக்கு தங்கம் வழங்கிடும் பொருட்டும், கணவரை இழந்த விதவைகளுக்கு புதுவாழ்வு அளித்திட  விதவை மறுமணம் திருமண நிதியதவி வழங்கிடும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, பள்ளிப் படிப்பை முடித்த பெண்களுக்கு நிதியுதவி தொகையாக ரூ.25,000/- மற்றும் பட்டபடிப்பு பயின்ற பெண்களுக்கு ரூ.50,000/- நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.அதன்படி, 2024-2025 ஆம் ஆண்டில், அருப்புக்கோட்டை, சாத்தூர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 130 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.79.12 இலட்சம் மதிப்பில் தங்க நாணயங்கள் மற்றும்  ரூ.53.75 இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகள் என மொத்தம் ரூ.1.33 கோடி மதிப்பிலான  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.அதுமட்டுமல்ல பெண்களுக்கான அனைத்து நலத்திட்டங்களையும் செய்யக்கூடிய அரசாக இந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு செயல்படுகிறது.அதற்கு காரணம் பெண்கள் முன்னேறினால் சமுதாய முன்னேறும். சாதாரணமாக ஒரு வீட்டில் பெண் கல்வி கற்றிருந்தால் அந்த குடும்பமே படித்து விடும். கல்வி அறிவு மட்டுமல்ல நாகரீகமும் சேர்ந்து வளரும்.இந்த சமுதாயத்தில் பாதிக்கு மேலான  வேலைகளை பெண்கள்தான் செய்கிறார்கள்.ஆண்களை விட அதிகமாக வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்யும் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படுகிறது.அதுபோல,அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. விடியல் பயணம் மூலம் மகளிர்களுக்கு இலவச பயணம்,மகளிர் சுய உதவி குழுக்களுக்கு எந்தவித பிணையும் இல்லாமல் கடனுதவிகள் வழங்கப்படுகிறது.முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் 1 முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவுகள் வழங்கப்படுகிறது.இதனால்,மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதோடு,தாய்மார்களின் பணிச்சுமையும் குறைகிறது.இதுபோன்ற எண்ணற்ற பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்தும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசுக்கு பெண்கள் என்றும் உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைத்து திட்டங்களையும் பெண்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு, குறிப்பாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய வலிமை அடைய வேண்டும் என்பதற்காக தான் இந்த நிகழ்ச்சி  என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 161 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,01,800ஃ வீதம் மொத்தம் ரூ.1.64 கோடி மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்களையும்,15 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கான தங்கத்தினையும்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்  திருமதி ஷீலா சுந்தரி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் திரு.சீனிவாசன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கண்காணிப்பாளர் திருமதி யுவஸ்ரீ மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 11, 2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ , மாணவிகளுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கு இணையதள வழியாக விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில்  இளங்கலை அறிவியல் B.Sc (Hospitality & Hotel Administration) பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் (Diploma) சேர்ந்து படித்திட விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை  சார்ந்தவருக்கு B.Sc (Hospitality & Hotel Administration)  மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பும், ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma in Food Production)  பட்டயப் படிப்பும் மேலும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினஞர் (Craftsmanship Course in Food Production & Patisserie)  ஆகிய படிப்புகள் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.சென்னை தரமணியிலுள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition என்ற  நிறுவனமானது ISO 9001 2015 தரச்சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமையப் பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம், மேலும் இந்நிறுவனம் சர்வதேச Amercian Council of Business  அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும்  பிரான்ஸ் நாட்டில் உள்ள  Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. Hotel Management Institute Survey ன்படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில்  பதிமூன்றாவது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது. மேற்கண்ட நிறுவனத்தில் பயில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக  இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மொத்த மதிப்பெண்ணில் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க இப்படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தங்களது திறமையின் அடிப்படையில் நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள் விமானத்துறை, கப்பல் துறை மற்றும் சேவை துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படும்.ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000-  முதல் ரூ.35,000- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000-  முதல் ரூ.70,000-  வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம் ww.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 11, 2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) வகுப்புகள் நடைபெற உள்ளது

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) அளிக்கப்படவுள்ளது.இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பி.எஸ்.சி மற்றும் எம்.எஸ்.சி நர்சிங் பட்டப் படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங், மற்றும் பொது செவிலியர் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியில் பங்கு பெற 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்காக கால அளவு இரண்டு மாதமும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும்.  இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் ww.tahdco.com  என்ற முகவரியில் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 10, 2025

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் நான் முதல்வன் பினிஸிங் ஸ்கூல் திட்டத்தின்கீழ் தொழிலக பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு சிறப்பு சேர்க்கை முகாம்

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ்; வேலைவாய்ப்பு பயிற்சி  (PM INTERNSHIP) வழங்கும் திட்டத்தின் வாயிலான நடப்பாண்டில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 14,889 நபர்களுக்கு முன்னனி தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் சேர்வதற்கு தேவையான கல்வி தகுதியுடைய 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டயப்பொறியாளர், இளங்கலை கலை, அறிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு, வணிக நிர்வாகம் மற்றும் பார்மஸி பட்டம் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 11.03.2025 செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இத்திட்டத்திற்கான சிறப்பு சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற 21 முதல் 24-வயதிற்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்காலத்தில் 12 மாதங்களுக்கு உதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.5,000- வீதம் வழங்கப்படும். மேலும் பயிற்சிக்காலத்தில் ஒருமுறை மட்டும் மானியமாக ரூ.6,000 வழங்கப்படும். இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவர்கள் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசியுடன் வரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஏற்கனவே தேசிய தொழிற்பழகுநர் திட்டத்தில் தொழிற் பழகுநர் பயிற்சி பெற்றிருக்க கூடாது. மேலும் முழுநேர பணிசெய்பவராகவோ, முழுநேரக் கல்வி கற்பவராக இருக்ககூடாது.  இத்திட்டத்தில்  விண்ணப்பிக்க 12.03.2025 அன்று கடைசி நாளாகும்.மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம் மற்றும் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்; (04562 -294755) என்ற  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் இணையம் மூலம் விண்ணப்பிக்க https://pminternship.mcg.gov.in/ என்ற வலைதளத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.மேலும், நான் முதல்வன் பினிஸிங் ஸ்கூல் (NMFS) என்னும் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சித்திட்டத்தில் இணைந்து பயிற்சி பெற விரும்புவோர் 16 வயது முதல் 45 வரை உள்ளவர்கள் அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் https://candidate.tnskill.tn.gov.in-இல் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட இருதிட்டங்களிலும் விண்ணப்பிக்க விரும்புவோர் இம்முகாமில் கலந்துகொள்ளவும், கலந்துகொள்ள இயலாதவர்கள் மேற்காணும் வலைதளங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

1 2 ... 127 128 129 130 131 132 133 ... 139 140

AD's



More News